ilakkiyainfo

‘போலி’ பிரதமர் அலுவலக அதிகாரிக்கு கமாண்டோ படை பாதுகாப்பு வழங்கிய ஸ்ரீநகர் போலீஸ் – கடைசியில் மோசடி நபர் சிக்கியது எப்படி?

பிரதமர் அலுவலகத்தில் மூத்த அதிகாரி என தன்னை அழைத்துக் கொண்டு, ஜம்மு காஷ்மீர் அரசு நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளை ஏமாற்றிய குஜராத்தைச் சேர்ந்த நபரை ஸ்ரீநகர் காவல்துறை கைது செய்திருக்கிறது.

ஆனால், இந்த கைது நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்பாக அந்த நபருக்கு இதே காவல்துறை இசட் பிரிவு பாதுகாப்பு அளித்து அவரை பல பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்த சம்பவம் சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

பிரதமர் அலுவலகத்தின் பெயரை பயன்படுத்திக் கொண்டு ஒரு மோசடி நபர், பலத்த பாதுகாப்பு நிறைந்த ஜம்மு காஷ்மீர் போன்ற யூனியன் பிரதேசத்துக்கு ஒரு முறை அல்ல இரண்டு முறை வந்து அங்குள்ள அதிகாரிகளை ஏமாற்றியிருக்கும் சம்பவம் பாதுகாப்பு ரீதியிலான பல கேள்விகளையும் எழுப்புகிறது

இந்த விவகாரத்தில் செய்திக்குறிப்பையோ விளக்கத்தையோ ஜம்மு ஸ்ரீநகர் காவல்துறை வெளியிடவில்லை. அதே சமயம், நடந்த சம்பவம் தொடர்பான உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

 

கைது செய்யப்பட்டுள்ள நபர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கிரண் ஜே. படேல். இவர் தன்னை பிரதமர் அலுவலகத்தின் உத்திகள் மற்றும் பிரசாரப்பிரிவின் கூடுதல் இயக்குநர் என்று அழைத்துக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் இரண்டு மாவட்டங்களின் துணை ஆணையர்களையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். அதில் ஒரு அதிகாரியின் பரிந்துரைப்படி கிரண் படேலுக்கு ஜம்மு காஷ்மீர் போலீஸின் கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் அலுவலக பெயரை பயன்படுத்திக் கொண்டு ஒரு அதிகாரி வந்தால், அவரது உண்மைத் தன்மையை சரிபார்க்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை கூட மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளாமல் எவ்வாறு கோட்டை விட்டது என்பதுதான் இந்த விவகாரத்தில் பலரும் சமூக ஊடகங்களில் எழுப்பும் கேள்வி ஆக உள்ளது.

 

போலீஸ் வழக்குப்பதிவு

ஸ்ரீநகர் காவல்துறையின் 19ஆம் எண் கொண்ட முதல் தகவல் அறிக்கைப்படி “மார்ச் 2ஆம் தேதி அன்று நிஷாத் காவல்நிலையத்தில் இந்த நபர் குறித்து நம்பகமான தகவல் கிடைத்தது.

அதன்படி குஜராத்தில் வசிக்கும் ஜக்தேஷ் பாய் படேலின் மகன் கிரண் பாய் படேல் என்றும் அவர் பிரதமரின் அலுவலக அதிகாரி என்ற அடையாளத்துடன் மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த காவல் நிலையம் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பிற பகுதிகளின் அதிகார வரம்பிற்குள்ளான பகுதிகளில் குற்ற நோக்கத்துடனும் போலியான வழிகளைப் பயன்படுத்தியும் கிரண் ஜே படேல் மூத்த அரசு அதிகாரியாக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார்,” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கிரண் படேலை வெள்ளிக்கிழமை வரை போலீஸ் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதேவேளை, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மாவட்டங்களில் ஒன்றின் மாவட்ட ஆட்சியர் அந்தஸ்திலான துணை ஆணையர் ஒருவரே கிரண் படேலுக்கு பாதுகாப்பு வழங்க பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

தெற்கு காஷ்மீர் பகுதிகளில் உள்ள ஆப்பிள் பழத்தோட்டங்களை அடையாளம் காண தாம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்துறைகளின் உயர் பதவிகளில் இருப்பவர்களின் பெயர்களை கூறி தாம் சந்தித்த அதிகாரிகளை அவர் கவர்ந்தார் என்றும் தெரிய வந்துள்ளது.

கிரண் படேல், குஜராத்தில் 12க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் தேடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீநகரில் ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தபோது அவரை காஷ்மீர் போலீஸார் கைது செய்துள்ளனர். அவருடன் அமித் ஹிதேஷ் பாண்டியா, ஜெய் சீதாபாரா ஆகிய குஜராத்தை சேர்ந்தவர்களும் த்ரிலோக் சிங் என்ற ராஜஸ்தானை சேர்ந்தவரும் தங்கியிருந்துள்ளனர். அந்த மூவரும் போலீஸார் வருகைக்கு முன்பே தப்பியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

போலீஸாரிடம் பிடிபடும் முன்பாக, இசட் பிளஸ் பாதுகாப்பு சகிதமாக கிரண் படேல், காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள தூத்பாத்ரி என்ற இடத்துக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரை வழிநடத்திச் சென்றவர் துணை ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி என்பதால் கிரணுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பான மரியாதை கிடைத்திருக்கிறது.

இரண்டு முறை வந்தபோது சந்தேகம் அடையாக ஜம்மு காஷ்மீர் போலீஸார், மூன்றாவது முறையாக அவரது நடமாட்டங்களை கூர்மையாக கவனித்ததில் சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து டெல்லி மற்றும் ஸ்ரீ்நகரில் உள்ள சிஐடி போலீஸார், கிரண் படேல் மோசடி நபர் என்பதை உறுதிப்படுத்திய நிலையில், அவரை கையும் களவுமாக மூன்றாவது பயணத்தின்போது ஸ்ரீகர் கைது செய்துள்ளனர்.

கிரண் படேல் யார்?

போலி பிரதமர் அலுவலக அதிகாரி

 

சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் கணக்கைக் கொண்ட குஜராத்தைச் சேர்ந்தவரான கிரண் படேல், தமது ட்விட்டர் சுயவிவரக் குறிப்பில், விர்ஜீனியாவில் உள்ள காமன்வெல்த் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி மற்றும் ஐஐஎம் திருச்சிராப்பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கணினி அறிவியலில் எம்.டெக் மற்றும் கணினிப் பொறியியலில் பி.இ முடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன் தமது தனித்திறமைகளாக தன்னை ஒரு சிந்தனையாளர், கேந்திர உத்தி வகுப்பாளர், ஆய்வாளர் மற்றும் பிரசார மேலாளர் என்றும் கிரண் படேல் அழைத்துக் கொண்டுள்ளார்.

ஸ்ரீநகரில் தங்கியிருந்த போது தனக்கு பாதுகாப்பு வழங்கியவர்களை ஏமாற்ற போலி ஆவணங்களை கிரண் படேல் தயாரித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவரை உண்மையிலேயே பிரதமர் அலுவலகத்தின் அதிகாரி என்று நம்பியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர், தனக்கு மிக முக்கிய பிரமுகருக்கான பாதுகாப்பு வழங்கும் காணொளிகளையும் இந்த நபர் தமது சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

ஒரு காணொளியில், புத்காமில் உள்ள தூத்பத்ரியில் துணை ராணுவ படையினருடன் அவர் பனியில் நடந்து செல்கிறார். மற்றொரு இடுகையில், ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக் மணிக்கூண்டு முன்பும் அவர் பாதுகாப்பு படையினருடன் எடுத்துக் கொண்ட படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

Exit mobile version