யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் மீனவர் ஒருவரின் வாடி தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

புதுவருடக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் நேற்று திங்கட்கிழமை (01) மாலை 04.30 மணியளவில் குறித்த வாடி எரிவதைக் கண்டு கடற்கரை நோக்கி விரைந்து தீயை அணைக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.

செல்வரத்தினம் சுதர்சன் என்னும் குடும்பஸ்தருடைய வாடியே எரிக்கப்பட்டுள்ளதோடு பத்து இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளும் தீயில் எரிந்துள்ளன.

முன்பகை காரணமாகவே சந்தேக நபர் தன்னுடைய வாடியை கொழுத்தியதாகவும் சந்தேக நபருக்கெதிராக மருதங்கேணி பொலிஸில் ஏற்கெனவே முறைப்பாடு அளித்தும் பொலிஸார் அவரை விடுவித்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

ஆலயத்தில் லொத்தர் போடப்பட்டு இந்த வருட நாள் தொழிலை குறித்த குடும்பஸ்தர் மேற்கொள்ள இருந்த நிலையில் அவருடைய வாடி தீயிடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு அருட்தந்தை அமல்ராஜ் அடிகளார் வருகை தந்ததோடு கட்டைக்காடு கடற்றொழிளாளர் சங்கமும் சம்பவத்தை நேரில் பார்வையிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version