அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், உப ஜனா­தி­பதி ஜே.டி. வான்ஸ் மற்றும் உக்­ரே­னிய ஜனா­தி­பதி வொலோ­டிமிர் ஸெலென்ஸ்கி ஆகி­யோ­ருக்கு இடையில் வெள்ளை மாளி­கையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்பெற்ற கடும் வாக்­கு­வாதம் உலக நாடு­களில் பெரும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஊட­கங்­களின் முன்­னி­லையில் இடம்­பெற்ற இந்த வாக்­கு­வா­தத்­தை­ய­டுத்து அமெ­ரிக்க – உக்ரேன் உறவு மற்றும் ரஷ்ய- –உக்ரேன் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­கான முயற்­சி­களின் எதிர்­காலம் குறித்த கேள்­வி­களும் எழுந்­துள்­ளன.

டொனால்ட் ட்ரம்பை பொறுத்­த­வரை, அவர் ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டி­னுக்கு நெருக்­க­மா­னவர் என்­பது பகி­ரங்­க­மா­னது. உக்ரேன் யுத்தம் தொடர்பில் அவர் ஏற்­கெ­னவே ஸெலென்ஸ்­கியை விமர்­சித்­தி­ருந்தார்.

கடந்த 18 ஆம் திகதி சவூதி அரே­பி­யாவின் றியாத் நகரில் அமெ­ரிக்­கா­வுக்கும் ரஷ்­யா­வுக்கும் இடையில் உக்ரேன் தொடர்­பாக பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டதை ஸெலென்ஸ்கி விமர்­சித்­தி­ருந்தார். ‘உக்ரேன் தொடர்­பா­க, உக்ரேன் இல்­லாமல் அவர்கள் பேச்­சு­வார்த்தை நடத்­து­கி­றார்கள்’ என ஸெலென்ஸ்கி கூறினார்.

மறுநாள், தனது ட்ரூத் சோஷல் சமூக வலை­த­ளத்தில் ட்ரம்ப் வெளி­யிட்ட பதி­வொன்றில், தேர்தல் நடத்­தாமல் ஆட்­சியில் நீடிக்கும் சர்­வா­தி­காரி என வொலோ­டிமிர் ஸெலென்ஸ்­கியை விமர்­சித்­தி­ருந்தார்.

எனினும், அடுத்த சில நாட்­களில் உக்­ரே­னுடன் ட்ரம்ப் நெருங்கி வந்தார். உக்­ரேனின் கனிம வளங்­களை அமெ­ரிக்­கா­வுடன் பகிர்ந்­து­கொள்­வது தொடர்­பான ஒப்­பந்தம் தொடர்­பாக தன்னை ஸெலென்ஸ்கி சந்­திக்­க­வுள்­ள­தாக ட்ரம்ப் அறி­வித்தார்.

கடந்த 27 ஆம் திகதி வெள்ளை மாளி­கையில் செய்­தி­யா­ளர்­களை ட்ரம்ப் சந்­தித்­த­போது, “ஸெலென்ஸ்கி ஒரு சர்­வா­தி­காரி என இன்னும் கரு­து­கிறீர்களா” என ட்ரம்­பிடம் செய்­தி­யா­ளர்கள் வின­வினர்.

அப்­போது, “நான் அதை சொன்­னேனா, என்னால் நம்ப முடி­ய­வில்லை” எனக் கூறிய ட்ரம்ப், ஸெலென்ஸ்­கியை புகழ்ந்தார்.

“ஜனா­தி­பதி ஸெலென்ஸ்­கி­யுடன் நான் இணைந்து செயற்­பட விரும்­பு­கிறேன். நாம் அவ­ருடன் இணைந்து செயற்­ப­டுவோம். அந்த ஜனா­தி­ப­திக்கும் எனக்கும் இடையில் சிறந்த உறவு இருக்­கி­றது” என ட்ரம்ப் பதி­ல­ளித்தார். அவ்­வே­ளையில் பிரித்­தா­னிய பிர­தமர் கெய்ர் ஸ்டார்­மரும் அருகில் இருந்தார்.

அதன் பின்னர் உக்­ரே­னிய கனி­மங்கள் தொடர்­பாக கையெ­ழுத்­தி­டப்­ப­டக்­கூ­டிய உடன்­ப­டிக்கை மீது உலகின் கவனம் குவியத் தொடங்­கி­யது.

இந்த ஒப்பந்தத்தில் உக்­ரே­னுக்கு அமெ­ரிக்­காவின் பாது­காப்பு உத்­த­ர­வாதம் வழங்­கப்­பட வேண்டும் என ஸெலென்ஸ்கி கூறினார். ஐரோப்­பிய நாடு­களும் இக்­கோ­ரிக்­கைக்கு ஆத­ர­வ­ளித்­தன.

ஆனால், பாது­காப்பு உத்­த­ர­வாதம் அளிக்க முடி­யாது எனக் கூறிய ட்ரம்ப், உக்­ரேனில் அரிய கனி­மங்­களை அமெ­ரிக்க ஊழி­யர்கள் அகழ்ந்­தெ­டுப்­ப­தா­னது உக்­ரே­னுக்கு தன்­னி­யக்­க­மான பாது­காப்பு உத்­த­ர­வா­தத்தை வழங்கும் என்றார்.

இப்­பின்­ன­ணியில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை (28) வெள்ளை மாளி­கைக்கு விஜயம் செய்த உக்­ரே­னிய ஜனா­தி­பதி ஸெலென்ஸ்­கியை அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக வர­வேற்றார்.

வெள்ளை மாளி­கையின் ஓவல் மண்­ட­பத்தில், இரு­வ­ருக்கும் இடை­யி­லான கலந்­து­ரை­யா­ட­லின்­போது உப ஜனா­தி­பதி ஜே.டி. வான்ஸ் மற்றும் உக்­ரே­னிய அதி­கா­ரி­களும் கலந்­து­கொண்­டனர். கனி­ம­வள ஒப்­பந்­த­துக்கு முன்­னோ­டி­யான சம்­பி­ர­தாய கலந்­து­ரை­யா­ட­லாக இது அமையும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

சுமார் அரை மணித்­தி­யாலம் சுமு­க­மாக இக்­க­லந்­து­ரை­யாடல் நடை­பெற்­றது. அதன்பின் அது ஆக்­ரோ­ஷ­மா­ன­தாக மாறி­யது.

உக்ரேன் போரை இரா­ஜ­தந்­திர நகர்­வுகள் மூலம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என அமெ­ரிக்க உப ஜனா­தி­பதி ஜே.டி. வான்ஸ் கூறியதையடுத்து சர்ச்சை ஆரம்பமாகியது.

‘அது எந்த வகை­யான இரா­ஜ­தந்­திரம்’ என வான்ஸிடம் ஸெலென்ஸ்கி கேள்வி எழுப்­பினார். அதை­ய­டுத்து வாக்­கு­வாதம் முற்­றி­யது.

அப்போது, வெள்ளை மாளி­கையின் ஓவல் அலு­வ­ல­கத்­திற்கு வந்து அமெ­ரிக்க ஊட­கங்கள் முன்­பா­கவே வாதி­டு­வது அவ­ம­ரி­யாதை என உப ஜனா­தி­பதி வான்ஸ் கூறினார். ட்ரம்பின் தலை­மைக்கு ஸெலென்ஸ்கி நன்றி தெரி­விக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இவ்­வி­ரு­வ­ருக்கும் இடையில் அமர்ந்­தி­ருந்த ஜனா­தி­பதி ட்ரம்ப், ஜனா­தி­பதி ஸெலென்ஸ்­கியை நோக்கி, “நீங்கள் போது­மான அள­வுக்கு பேசி­விட்­டீர்கள். நீங்கள் நன்­றி­யுடன் இருக்க வேண்டும். இந்த ஆட்­டத்தில் தொடர்ந்து நீடித்­தி­ருக்க உங்­க­ளிடம் எதும் இல்லை”என்றார்.

“நீங்கள் மூன்றாம் உலகப் போர் உரு­வாகும் நெருக்­க­டி­யுடன் விளை­யா­டு­கி­றீர்கள். இந்த நாட்­டுக்கு மிகவும் அவ­ம­ரி­யா­தை­யா­னது” எனவும் ட்ரம்ப் விமர்­சித்தார்.

உக்­ரேனின் போர் முயற்­சி­க­ளுக்கு உறு­து­ணை­யாக இருந்த அமெ­ரிக்­கா­வுக்கு ஸெலென்ஸ்கி போது­மான அளவு நன்­றி­யுள்­ள­வ­ராக இல்லை என்று ட்ரம்பும், வான்ஸும் குற்­றம்­சு­மத்­தினார்.

அமெ­ரிக்­கா­வுக்­கான உக்ரேன் தூதுவர் தனது தலையில் கைகளை வைத்துக் கொண்டு அந்த இந்­நி­கழ்வை பார்த்துக் கொண்­டி­ருந்தார். அங்­கி­ருந்த செய்­தி­யா­ளர்­க­ளுக்கும் இந்­நி­கழ்வு வியப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

இரத்­தான நிகழ்­வுகள்

இந்த வாக்­கு­வா­தத்தின் பின்னர், உக்­ரே­னிய கனி­மங்கள் தொடர்­பான உடன்­ப­டிக்கை கையெ­ழுத்­திடும் வைப­வமும், இரு ஜனா­தி­ப­தி­களும் கூட்­டாக நடத்­த­வி­ருந்த செய்­தி­யாளர் மாநாடும் இரத்துச் செய்­யப்­பட்­டன.

அதன்பின் வெளியே காத்­தி­ருந்த வாக­னத்தில் ஏறிய ஜனா­தி­பதி ஸெலென்ஸ்கி, வெள்ளை மாளி­கை­யி­லி­ருந்து வெளி­யே­றினார். அவர் சமா­தா­னத்தை விரும்­பினால் திரும்பி வரலாம் என ட்ரம்ப் பின்னர் செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறினார்.

வெளி­யேற்றம்

ஓவல் அலு­வ­லக மோதலின் பின்னர் ஸெலென்ஸ்கி மற்றும் ஏனைய உக்­ரே­னிய பிர­தி­நி­திகள் வெள்ளை மாளி­கை­யி­லி­ருந்து வெளி­யே­று­மாறு கோரப்­பட்­ட­தாக ட்ரம்பின் ஊடக செய­லாளர் தெரி­வித்தார்.

வெள்ளை மாளிகை சந்­திப்பின் பின்னர் ஜனா­தி­பதி ஸெலென்ஸ்கி அளித்த செவ்­வி­யொன்றில், மேற்­படி சந்­திப்பு கடி­ன­மாக இருந்­த­போ­திலும், அமெ­ரிக்க, உக்ரேன் உறவு மீட்­கப்­ப­டக்­கூ­டி­யது என தான் நம்­பு­வ­தாக குறிப்­பிட்­டுள்ளார்.

அதன்பின் எக்ஸ் வலை­த­ளத்தில் ஸெலென்ஸ்கி வெளி­யிட்ட பதிவில், ஜனா­தி­பதி ட்ரம்­புக்கும், அமெ­ரிக்க பாரா­ளு­மன்­றத்­துக்கும், அமெ­ரிக்க மக்­க­ளுக்கும் நன்றி தெரி­வித்­துள்ளார். ‘உக்ரேன் நிரந்­தர சமா­தா­னத்தை விரும்­பு­கி­றது. நாம் அதற்­காக செயற்­ப­டு­கிறோம்’ என அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

எதி­ரொ­லிகள்

ட்ரம்பின் குடி­ய­ரசுக் கட்சி பிர­மு­கர்கள் பலர், வெள்ளை மாளிகை மோதல் தொடர்பில் ஸெலென்ஸ்­கியை விமர்­சித்­துள்­ளனர். அவர் மன்­னிப்பு கோர வேண்டும் என அமெ­ரிக்க இரா­ஜங்கச் செய­லாளர் மார்கோ ரூபியோ கூறி­யுள்­ளனர். ஆனால், ஜன­நா­யகக் கட்­சி­யினர் ஸெலென்ஸ்­கியை ஆத­ரித்­துள்­ளனர்.

அதே­வேளை, அமெ­ரிக்­காவின் நட்பு நாடுகள் உட்­பட பல நாடு­களின் தலை­வர்கள் ஸெலென்ஸ்­கிக்கு ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

கனடா தொடர்ந்தும் உக்­ரே­னுக்கு ஆத­ர­வ­ளிக்கும் என கனே­டிய பிர­தமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரி­வித்­துள்ளார். “உக்ரேன் மீதான ரஷ்­யாவின் ஆக்­கி­ர­மிப்பு நியா­யப்­ப­டுத்த முடி­யா­தது. ஜன­நா­யகம், சுதந்­திரம், இறை­யாண்மை ஆகி­ய­வற்­றுக்­கான அவர்­களின் போராட்­ட­மா­னது நம் அனை­வ­ருக்கும் முக்­கி­ய­மா­னது” என அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

ட்ரம்ப், ஸெலென்­ஸகி இரு­வ­ரு­டனும் பிரித்­தா­னிய பிர­தமர் கெய்ர் ஸ்டார்மர் தொலை­பே­சியில் உரை­யா­டினார் என பிரித்­தா­னிய பிர­த­மரின் பேச்­சாளர் தெரி­வித்­துள்ளார்.

உக்­ரே­னுக்கு அவர் தனது ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­ய­துடன், உக்­ரேனின் இறை­யாண்மை, பாது­காப்பை உறு­தி­ப­டுத்­து­வதன் அடிப்­ப­டையில் நிரந்­தர சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக அனைத்து முயற்­சி­க­ளையும் மேற்­கொள்­கிறார் எனவும் அப்­பேச்­சாளர் தெரி­வித்­துள்ளார்.

ஐரோப்­பிய ஆணைக்குழுவின் தலை­வர்­க­ளான ஊர்­சுலா வொன் டேர் லெயென், ஐரோப்­பிய பேர­வையின் தலைவர் அன்­டோ­னியோ கொஸ்டா ஆகியோர் கூட்­டாக வெளி­யிட்ட அறிக்­கையில், ‘வலி­மை­யாக, துணி­வாக, அச்­ச­மின்றி இருங்கள்’ என ஸெலென்ஸ்­கியை கோரி­யுள்­ளனர்.

உக்ரேன் யுத்­தத்தில் ரஷ்­யாவே ஆக்­கி­ர­மிப்­பாளர் என பிரெஞ்சு ஜனா­தி­பதி இமா­னுவெல் மெக்ரோன் கூறி­யுள்ளார்.

ஜேர்­ம­னியின் சான்ஸ்லர் ஒலாவ் ஷோல்ஸ், புதிய சான்ஸ்லராக பதவியேற்கவுள்ள பிரெடரிக் மேர்ஸ் ஆகியோரும் உக்ரேனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

உக்ரேனுக்கு அவுஸ்திரேலியா தேவையான வரை தொடர்ந்தும் ஆதரவளிக்கும் பிரதமர் அன்டனி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.

‘உக்ரேனிய நண்பர்களே நீங்கள் தனிமையாக இல்லை’ என போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

ஸ்பானிய பிரதமர் பெட்ரோ சான்சஸ், நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கோவ் ஆகியோரும் உக்ரேனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் கருத்து

இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் ட்ரம்புக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது. “ஜனாதிபதி ட்ரம்பும் உப ஜனாதிபதி வான்ஸும், ஸெலென்ஸ்கியை அடிக்காமல் பொறுமை காத்துள்ளனர்” என ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மரியா ஸக்கரோவா தெரிவித்துள்ளார்.

ட்ரம்புக்கும், புட்டினுக்கும் நெருக்கமான ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஒர்பன், சமாதானதுக்காக துணிச்சலுடன் செயற்படும் ட்ரம்பை பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.

ஆர்.சேது­ராமன்

Share.
Leave A Reply

Exit mobile version