கேகாலை , தெதிகம, மெனிக்கடவர பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது மனைவி மற்றும் மகளை மண்வெட்டியால் தாக்கி காயப்படுத்திவிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெதிகம பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தெதிகம, மெனிக்கடவர பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தை ஆவார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

உயிரிழந்த தந்தை நேற்று வியாழக்கிழமை அதிகாலை 01.30 மணியளவில் வீட்டில் உள்ள அறை ஒன்றில் உறங்கிக்கொண்டிருந்த மனைவி மற்றும் மகளை மண்வெட்டியால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இரண்டாவது அறையில் உறங்கிக்கொண்டிருந்த மற்றுமொரு மகள் சத்தத்தைக் கேட்டு உடனடியாக தனது குழந்தையுடன் அயல் வீட்டிற்குள் ஓடிச் சென்று அங்கிருந்தவர்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இதனையடுத்து அயல் வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் இணைந்து காயமடைந்த மனைவி மற்றும் மகளை பல்லேகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் காயமடைந்த மனைவி மற்றும் மகள் மேலதிக சிகிச்சைக்காக கேகாலை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

72 வயதுடைய மனைவியும் 51 வயதுடைய மகளுமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து தந்தை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version