இலங்கையின் மொத்தக் கடன் தொகை சுமார் 46.9 பில்லியன் அமெரிக்க டொலர் என்பது இன்றைய கணக்கு. நடந்து முடிந்த யுத்த செலவு, தொடரும் பாதுகாப்பு செலவு, அவ்வப்போது பதவிக்கு வந்த அரசாங்கங்களின் ஊழல் செலவு என அனைத்தையும் கூட்டியதாக இந்த 47 பில்லியன் வந்திருக்கிறது.
பூகோள பொருளாதாரமும் இதேபோல கடுமையான அழுத்தத்தில் உள்ளது. பலதரப்பட்ட வகையில் கடுமையான சிக்கல்களை சந்தித்து வருகிறது. உணவு பாதுகாப்பு, சக்திவள பாதுகாப்பு , வாழ்க்கைச்செலவின் அதிகரிப்பு, கடுமையான பணவீக்கம் , காலநிலை மாற்றம் என முன்பு எப்பொழுதும் பதிவு செய்யபடாத நிலைக்கு அதிகரித்துள்ளது.
இத்தகைய உலக மாற்றத்தின் மத்தியல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் அமெரிக்காவுக்கு முதலீடு தேடி சவூதி அரேபியாவுக்கு சென்றிருந்தார்.
கடந்த காலங்களில் அமெரிக்க அதிபர்கள் தமது பதவி ஏற்பின் பின்னர் முதன் முதல் சர்வதேச பயணம் செய்வதாயின் தம்மை மதித்து வரவேற்கக் கூடிய நாடுகளாக கருதப்படும் கனடா, மெக்ஸிக்கோ, அல்லது பிரித்தானியா போன்ற நாடுகளை தெரிவு செய்வதுண்டு.
ஆனால் ட்ரம்ப் பதவி ஏற்று கொண்டதிலிருந்து முதலாவதாக சவூதி அரேபியாவுக்குப் பயணம் செய்தமை இந்த பண்பாட்டை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமைந்துள்ளது. சவூதி அரேபியாவைத் தொடர்ந்து கட்டார், ஐக்கிய அரபு இராட்சியம் ஆகிய நாடுகளுக்கும் அதிபர் ட்ரம்ப் பயணம் செய்துள்ளார்.
தான் பயணம் செய்தால் அது பாரிய வெற்றியாக இருக்க வேண்டும், பிரமாண்டமாக வரவேற்புகள் இருக்க வேண்டும் என்ற அதிபர் ட்ரம்பின் விருப்பதிற்கமைய, ஏற்கனவே முன்னமைப்பு செய்யப்பட்ட வகையில், போகும் நாடுகளில் போராட்டங்கள் தவிர்க்கப்பட்டு ஒரு சக்கரவர்த்திக்குரிய மரியாதைகளுடன் நடத்தப்படுவார் என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
ட்ரம்பினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அமெரிக்காவுக்கான இறக்குமதி வரி விதிப்பு திட்டம் பொருளாதார ரீதியாக இணைந்திருந்த பல நாடுகளை விரிசலுக்கு உள்ளாக்கி வருகின்றது.
அதேபோல தன்னால் நிறுத்த முடியும் என்று கூறிக் கொண்ட, உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு இன்னமும் முடிவடைந்துவிடவில்லை. இந்த நிலையில் கூட்டு நாடுகள் பல ஒத்துழைப்புகளை நிறுத்தி, புதிய அணுகு முறைகளையும் சர்வதேச பதிலீட்டுக்கான கூட்டுக்களையும் நாடி நகரும் கால கட்டம் ஒன்று ஏற்கனவே உருவாகி வருகின்றது.
இந்த நிலையில், வர்த்தக உறவுகளாலும் பேரம் பேசல்களாலுமே நாடுகளை தன் பக்கம் வைத்துக் கொள்ளும் வாய்ப்புகள் உள்ளதாக வர்த்தக, பொருளாதார ஆய்வு நோக்குகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் புதிய வர்த்தகப் பேச்சுகள் மேற்கொள்ளப்பட்டன.
பாரிய நிதி இறையாண்மை கொண்ட தேசங்களாக வளைகுடா தேசங்கள் உள்ளன. இந்த நிதி வளங்களை அமெரிக்காவில் முதலீடு செய்யும் வகையிலான கவர்ச்சி மிக்க திட்டங்களை வகுத்து, வளைகுடா நாடுகளை அமெரிக்க முதலீட்டு சந்தைக்கு ஈர்த்து விடுவது முதன்மை திட்டமாக பார்க்கப்படுகிறது .
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவி ஏற்று கொண்ட நாளிலிருந்தே சவூதி அரேபியா பில்லியன் டொலர்கள் முதலீடுகளை தனது நாட்டை நோக்கி பாய வைப்பது அவரின் திட்டமாக இருந்தது .
சவூதி அரச குடும்பத்தாரையும் நடைமுறை ஆட்சியாளர் முடிக்குரிய இளவரசர் மொஹம்மட் பின் சல்மானையும் இத்தகைய ஒப்பந்தங்களில் எவ்வாறு சம்மதிக்க வைப்பது என்பதையே முழு நோக்கமாக கொண்டு செயற்பட்டார் என ட்ரம்பை செவ்விகண்ட செய்தியாளர்கள் ஏற்கெனவே கூறி உள்ளனர்.
இவ்வருடம் ஜனவரி மாதமளவில் 600 பில்லியன் டொலர் நிதி முதலீடு செய்வதற்கு இளவரசர் சல்மானினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
இது அமெரிக்காவுக்கான பொருளாதார பேரங்களை மட்டும் நோக்கமாக கொண்டது மட்டுமல்ல, அதிபர் ட்ரம்பின் குடும்ப வர்த்தகத்திலும் இது மிக அதிகளவிலான தாக்கம் விளைவிக்கும் என்று நம்பப்படுகிறது.
சவூதி அரேபியாவில் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தங்களில், ட்ரம்ப் அமையத்திற்கு சொந்தமான இரண்டு புதிய வீடமைப்புத் திட்டங்களும், அமெரிக்காவில் உள்ளது போலவே ட்ரம்ப் கோபுர கட்டடம் ஒன்று றியாத்தில் அமைத்து கொள்ளுதல், சவூதி அரேபிய கடற்கரை நகரமான ஜெத்தாவில் ஒரு வாழ்விட கட்டுமானத்தை அமைத்து கொள்ளுதல் என திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களுக்கு சவூதி அரேபிய கட்டுமான நிறுவனங்களுடனேயே ஒப்பந்தம் செய்துகொள்ளப்படவுள்ளது.
இவை தவிர கோல்வ் விளையாட்டுப் போட்டிகளுக்கு சவூதி நிதி உதவி செய்து வருகிறது . அமெரிக்காவில் ட்ரம்ப் அமையத்தின் பெயரில் பல கோல்வ் விளையாட்டு மைதானங்களில் இந்த விளையாட்டு தொடர் போட்டிகளை நடத்த உதவுவதன் ஊடாக ட்ரம்ப் அமையத்தின் வருவாயை அதிகரிக்க செய்யலாம்.
கட்டாரிலும் பதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ட்ரம்ப் அமையத்தின் கோல்வ் பந்தயத் திடலுக்கு கட்டாரிய நிதி உதவியுடன் கட்டார் அரசாங்க தயவு பெற்ற கட்டட ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கப்படவுள்ளது.
அது போல அரபு இராச்சியத்திலும் புதிய கோல்வ் விளையாட்டு திடல்கள் கட்டப்பட உள்ளன. மேலும் ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான 80 அடுக்கு மாடி சுற்றுலா விடுதி ஒன்று அமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இவற்றுடன் மேலும் பல ட்ரம்ப் குடும்ப வியாபார நிறுவனங்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைக்கப்பட உள்ளன.
சுய வியாபார ஒப்பந்தங்களை மையமாக கொண்ட முதலாவது சர்வதேச பயணத்தை மேற்கொண்டுள்ளார். மறுபுறத்தில் சர்வதேச விவகாரங்கள் பல தீர்க்கப்பட வேண்டிய நிலை இருப்தாக சுட்டி காட்டப்பட்டு வருகிறது.
இதில் முதலாவதாக பலஸ்தீனத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையில் யுத்த நிறுத்தத்தை கொண்டு வர வேண்டி உள்ளது.
இருந்த போதிலும் இம்முறை மத்திய கிழக்கு பயணத்தில் இஸ்ரேலுக்கு பயணம் செய்வதை ட்ரம்ப் தவிர்த்துக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் நலனுக்கு ஆதரவாக இஸ்ரேல் நடந்து கொள்வதாகவும் தெரியவில்லை.
தற்போதைய வாஷிங்டன் நிர்வாகத்திற்கும் இஸ்ரேலிய தலைமைக்கும் இடையில் ஒரு வகை இராஜதந்திர பதட்ட நிலை எழுந்துள்ளது என்பதை இது எடுத்து காட்டுகிறது.
ஆனாலும் காஸா கடற்கரைகளில் பலஸ்தீனியர்களை வீடற்றவர்களாக வைத்திருப்பதிலும் அத்தியாவசிய பொருட்களுக்கான தடைகளை போட்டு வைத்திருப்பதிலும் குண்டுகள் வீசி அழிப்பதிலும் தொடர்ச்சியாக இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.
அரபு நாடுகள் அமெரிக்க அதிபருக்கு இராஜரீக அந்தஸ்து நடைமுறைகளை நடைமுறைப்படுத்தும் அதேகால பகுதியில் அவர்களின் கண்முன்னே தனது நில ஆக்கிரமிப்பு கொள்கையிலிருந்து சற்றும் விலகாது, நினைத்த காரியத்தை இஸ்ரேலிய அரசாங்கம் விடாப்பிடியாக செய்து வருகிறது.
இது அமெரிக்க தலைமையின் மீது இஸ்ரேல் கொண்டிருக்கும் மதிப்பையும் சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் வலிமையற்ற நிலையையும் தத்துரூபமாக எடுத்துக்காட்டுகிறது.
உலகில் எத்தகைய கொடுமைகள் இடம்பெற்றாலும் அரசுகளும் அரச தலைவர்களும் சுயநல வர்த்தக பேரங்களை தேடியே ஓடுவர் என்பதை இந்த உலகம் இன்னமும் வெளிச்சமாக காட்டி நிற்கிறது.
-லோகன் பரமசாமி-