ரணில் விசாரணை
குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கடந்த புதன்கிழமை அழைக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவிடம், சுகாதார அமைச்சராக கெஹேலிய ரம்புக்வெல்ல பதவி வகித்த காலப்பகுதியில் மருந்து கொள்வனவில் ஏற்பட்ட மோசடிகள் குறித்து விசாரிக்கப்பட்டது.
அமைச்சரவை முடிவுகள் குறித்து வெளித்தரப்புக்கு தகவல் வழங்க முடியாது. ஏனெனில் நீதிமன்றத்தை தவிர்த்து வேறு எந்தவொரு வெளித்தரப்புக்கும் அமைச்சரவையின் உள்ளக விடயங்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்த வேண்டுமாயின், அதே அமைச்சரவையில் ஏகோபித்த இணக்கப்பாடு அவசியம். எனவே அமைச்சரவை தகவல்களை கேட்பது சட்டத்திற்கு முரணானது என குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
குற்றப்புலனாய்வு தினைக்களத்திற்கு சென்று குறுகிய நேரத்தில் வெளியில் வந்த ரணில் விக்கிரமசிங்க, அமைச்சரவை குறித்த சட்டங்கள் உள்ளடக்கிய நூலுடன் சென்று சட்டமாதிபருக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நகைப்புடன் கூறியுள்ளார்.
ரணிலின் இரகசிய ரஷ்ய விஜயம்
பொதுவாக, ரணில் விக்கிரமசிங்க உயர் மட்ட சர்வதேச உறவுகளைக் கொண்ட ஒருவராக கருதப்படுகிறார். கடந்த வாரத்தில் சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ரணில், கடந்த 12 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயம் தொடர்பில் தேசிய அரசியலில் கவனத்திற்கு உட்பட்டுள்ளதுடன், அரசாங்கமும் அவதானம் செலுத்தியுள்ளது. பிரித்தானியா அல்லது அமெரிக்கா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு ரணில் விஜயம் செய்வது சாதாரணமான விடயமாகும்.
ஆனால் ரஷ்யா எனும் போது, சற்று வேறுப்பட்ட கோணத்தில் அவதானிக்கப்படுகிறது. மேலும் இந்த விஜயம் தொடர்பில், ரணில் விக்கிரமசிங்கவுடன் ஊடக பிரிவும் எத்தகைய தகவல்களையும் வெளிப்படுத்த வில்லை.
ஜெனிவா நெருக்கடி
நாட்டிற்கு எதிரான சர்வதேச விவகாரங்கள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்துகின்ற விதம் குறித்து பல்வேறு அச்சங்கள் வெளிப்படுத்தப்படுகின்றது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட உள்ள அதேசமயம், சர்வதேச நாணய நிதியத்துடனான நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள ஸ்தம்பித நிலை குறித்து எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்;டி வருகின்றன. குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வொல்கர் டர்க், அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை இலங்கைக்கு வரவுள்ளார்.
இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களின் முன்னேற்றங்கள் குறித்து மீளாய்வு செய்யும் வகையிலேயே ஆணையாளர் வொல்கர் டர்கின் விஜயம் அமைகின்றது.
மற்றுமொரு புதிய தீர்மானம் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட உள்ள நிலையில், மனித உரிமைகள் ஆணையாளர் வொல்கர் டர்கின் இலங்கை விஜயத்தை சாதாரணமாக கருத முடியாது என்பது எதிர்க்கட்சிகளின் கருத்தாக உள்ளது.
இதேவேளை, கனடாவில் நிர்மானிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நிணைவுத்தூபி இலங்கைக்கு எதிராக வலுப்பெற்று வரும் சர்வதேசத்தின் நகர்வுகளை வெளிப்படுத்துகின்றது.
மறுபுறம் ஜெனிவாவில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை இலங்கை இன்னும் நிறைவேற்ற வில்லை. தற்போதைய அரசாங்கமும் இந்த விடயத்தில் மௌனமாகவே உள்ளது. எதிர்வரும் செப்டெம்பரில் இலங்கைக்ககு எதிரான தீர்மானத்தை எதிர்க்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பினை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து அரசாங்கம் தெளிவற்ற தன்மையிலேயே உள்ளது.
சர்வதேச நாணய நிதிய மோதல்
ஜெனிவா பிரச்சனைக்கு மாறாக சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடி மற்றுமொரு விடயமாகும். இலங்கைக்கான 4 ஆவது தவனை நிதியை விடுவிக்காமல் நாணய நிதியம், அழுத்தங்களை பிரயோகித்துள்ளது.
மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பது முக்கிய அழுத்தமாக உள்ளது. ஒப்பந்தத்தின் பிரகாரம் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்றா விடின், 4 ஆவது தவனை நிதி விடுவிக்கப்பட மாட்டாது என நாணய நிதியம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது.
இதன் பிரகாரம் மின்கட்டணத்தை 30 வீதத்தால் அதிகரிக்க வேண்டும் என்பது நாணய நிதியத்தின் நிபந்தனையாக உள்ளது.
இதற்கு காரணமாக மின் உற்பத்தி செலவுக்கும், விநியோகத்தில் பெற்றுக்கொள்ள கூடிய இலாபத்திற்கும் இடையில் காணப்பட கூடிய இடைவெளியாகும். ஆனால் 18 வீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் ஆரம்பத்தில் நாணய நிதியத்திடம் அனுமதி கோரியிருந்தது.
இதற்கு அனுமதி கிடைக்கப்படாத நிலையில், அரசாங்கம் கடந்த வாரம் 15 வீதத்தால் மின் கட்டணத்தை அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பானது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு முரண்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியத்தின் துணை முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத், இலங்கை தரப்புகளுடன் கலந்துரையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆளும் கட்சி முரண்பாடு
ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி) தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான இந்த பணிப்போர் தற்போது பல்வேறு வழிகளில் வலுப்பெற்றுள்ளது. அரச இயந்திரத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று அமைச்சரும்.
ஜே.வி.பியின் அடுத்த தலைவராக கருத கூடிய பிமல் ரத்நாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார். இதன் பிரகாரம் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற விடயத்தை உறுதிப்பட குறிப்பிட்டார்.
ஜே.வி.பியின் தீர்மானத்தையே பிமல் ரத்நாயக்க இதன் போது வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, அவ்வாறானதொரு அமைச்சரவை மாற்றம் தற்போது அநாவசியமானது என குறிப்பிட்டுள்ளார். சுனில் ஹந்துன்னெத்தியின் இந்த அறிவிப்பானது, பிமல் ரத்நாயக்கவுக்கு எதிரானதாக கருத முடிகிறது.
அதுமாத்திரம் அன்றி, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலும், அமைச்சரவை மாற்றம் குறித்து கேள்வியெழுப்பிய போது, அரசாங்கம் அவ்வாறானதொரு மாற்றம் குறித்து பேசவில்லை என நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.
சுனில் குழுக்கள் இத்தகைய போலி பிரசாரங்களை செய்வதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். எனவே பிமல் ரத்நாயக்க பகிரங்கமாக அறிவித்த அமைச்சரவை மாற்றத்திற்கு எதிராக, ஜே.வி.பி.யின் முக்கிய உறுப்பினர்கள் இருவரான சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் நளிந்த ஜஸதிஸ்ஸ கருத்து கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும் பிமல் ரத்நாயக்கவின் கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் நளிந்த ஜஸதிஸ்ஸ ஆகியோர் தன்னிச்சையாக பதிலளித்திருப்பார்கள் என்று நம்ப இயலாது. இது ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மற்றுமொரு முரண்பாட்டையே வெளிப்படுத்துகிறது.
இருப்பினும் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்படாத நிலையில், இவ்வாரம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மறுபுறம் அமைச்சரவை மாற்றம் குறித்து தான் தெரிவித்த கருத்தை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளமை முக்கிய விடயமாக கருத முடியும்.
அதே போன்று தற்போது சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும் இடையிலான உறவு வலுப்பெற்றுள்ளமையை அவதானிக்க முடிகிறது.
(லியோ நிரோஷ தர்ஷன்)