கடந்த கால ஆட்சியாளர்களின் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தி வரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சில முன்னாள் அமைச்சர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஏற்கனவே கைதாகி பிணையில் இருந்த வேளை பணச்சலவை விவகாரத்தில் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
இந்நிலையில் கறவை பசுகள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்ரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தொடர்பு பட்டிருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பதி தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, பி. ஹாரிசன், விஜித் விஜிதமுனி டி சொய்சா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் லக்ஷ்மன் வசந்த பெரேரா ஆகியோர் 110 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கால்நடை இறக்குமதி ஊழலில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டுள்ளதாக அவர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் எவரும் இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள அவர் அவர்களில் யாருக்கும் எந்த கருணையும் காட்டப்படாது” என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.
பால் கறப்பதற்காக பசுக்களை இறக்குமதி செய்வது என்ற போர்வையில் வயதான பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதே வேளை முன்னாள் ஆட்சியாளர்களின் காலத்தில் மிக மோசமான ஊழல் மற்றும் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளில் கைதாகி வரும் சிரேஷ்ட அரசியல்வாதிகளின் பட்டியல் இன்னும் நீளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரம் குறைந்த மருந்து இறக்குமதி விவகாரத்தில் சுகாதார அமைச்சர் கெஹலிய கைது செய்யப்பட்ட அதே வேளை அவரது மகனான ரமித் ரம்புக்வெலவும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டமை முக்கிய விடயம்.
மேலும் கிரிபத்கொடவில் அரசுக்குச் சொந்தமான நிலத்தை அங்கீகரிக்கப்படாத முறையில் விற்பனை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானாலும் தான் கை செய்யப்படுவதைத் தவிர்க்க அவர் தலைமறைவாகியிருந்தமை முக்கிய விடயம். பொது கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்ட இந்த நிலம், பொது சொத்து சட்டத்தை மீறி ஒரு தனியார் ஒருவருக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் கிரிபத்கொடை மற்றும் களனி பகுதியில் சண்டியராக செயற்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவும் குற்றப்புலனாய்வு பிரிவினாரால் கைது செய்யப்பட்டார்.
6 ஏக்கர், 3 ரூட் மற்றும் 11 பேர்ச் அளவுள்ள இந்த நிலம், புதிய நகரத் திட்டத்திற்காக களனி பிரதேச செயலகத்திற்கு மாற்றப்பட்டது.குழந்தைகள் பூங்கா மற்றும் நீர்வழிப்பாதைக்கு 0.2137 ஹெக்டேர் ஒதுக்கப்பட்டதை உள்ளடக்கிய நகரத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவதற்கு களனி பிரதேச சபை பொறுப்பேற்றது. மேர்வின் சில்வா மற்றும் மூன்று பேர் சேர்ந்து, நிலத்தை 3 மில்லியன் ரூபாய்க்கு விற்க போலி ஆவணங்களை உருவாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
கோத்தபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்த முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, 2021 ஆம் ஆண்டு தரமற்ற கரிம உரத் தொகுதிக்காக சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்திய சர்ச்சைக்குரிய வழக்கில், கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் மே 26 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பின்பு 20 வருட கடூழிய சிறைத்தண்டனைப் பெற்று தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.
ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் எழுந்த குற்றச்சாட்டின் பேரில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மார்ச் 2025 இல் கைது செய்யப்பட்டார்.
அரச வங்கிகளில் இருந்து நிதியை தனது அறக்கட்டளைக்கு திருப்பி, மாகாண சபைக்கு 1 மில்லியன் ரூபாயை தனிப்பட்ட முறையில் பெற்றதன் மூலம் 2.5 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
கூடுதல் நிதிக்கான அவரது கோரிக்கையை ஒரு வங்கி நிராகரித்ததை அடுத்து, மாகாண சபையின் அனைத்து நிலையான வைப்புத்தொகைகளையும் திரும்பப் பெற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு 23 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தற்போது பிணையில் வெளிவந்துள்ள அவர் மீதான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இதையடுத்து எரிபொருள் கொடுப்பனவு முறைகேடு குற்றச்சாட்டில் முன்னாள் வட மத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர், – முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவின் மனைவி – சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட பின்னர் 16 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அடுத்த தலைவர் என வர்ணிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க துப்பாக்கிச் சட்டத்தின் கீழ் உரிமம் இல்லாமல் கூடியிருந்த டி-56 ஆயுதத்தை வைத்திருந்தமைக்காக கைது செய்யப்பட்டார். அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றமை முக்கிய விடயம்.
இவ்வாறு கடந்த ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளைகளாகவும் அடியாட்களாகவும் விளங்கிய பல சிரேஷ்ட அரசியல் பிரமுகர்கள் கைதாகி வரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதிகள் மூவருக்கு எதிராக தற்போது பசுமாடுகள் இறக்குமதி ஊழல் விவகாரம் வெளிப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளுக்கு முன்னாள் ஜனாதிபதிகள் மூவரும் அழைக்கப்படுவர் எனக் கூறப்படுகின்றது.
சி.சி.என்