மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வட மாகாணத்திலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், மத்திய, சப்ரகமுவ, மேல், தென், வடமத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி  பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில்  அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

“மொன்தா” சூறாவளியானது இலங்கைக்கு வடகிழக்காக வங்காள விரிகுடாவின் கடல் பிராந்தியத்திற்கு மேலாக முல்லைத்தீவில் இருந்து சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருப்பதை இன்று காலை 2.30 மணியளவில் அவதானிக்கப்பட்டது.

இது மேலும் தீவிரமடைந்து பலமிக்க சூறாவளியாக வடக்கு – வடமேற்குத் திசையை அண்மித்து நகர்ந்து செல்வதுடன் இன்று மாலை அல்லது இரவு வேளையில் ஆந்திரப் பிரதேசத்தின் கரையை ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும்  அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.

சிலாபம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

திருகோணமலை  தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 65 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

Share.
Leave A Reply

Exit mobile version