மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில், நாவற்குடா பகுதியில் கடந்த 01 ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி, வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக வந்திருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

காத்தான்குடியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,

கடந்த 01 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஒரே திசையில் இரு மோட்டார் சைக்கிள்கள் பயணித்துள்ளன. இதன்போது, பின்னால் வந்த உயிரிழந்த இளைஞனின் மோட்டார் சைக்கிள், முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளின் புகைபோக்கியில் (Silencer) மோதியுள்ளது.

இந்த விபத்தின் காரணமாக குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உயிரிழந்த இளைஞர் கத்தார் நாட்டில் பணிபுரிந்து வந்தவர் என்பதும், விடுமுறைக்காகத் தாய்நாடு திரும்பியிருந்த அவர், தனது விடுமுறையை முடித்துக்கொண்டு எதிர்வரும் 05 ஆம் திகதி மீண்டும் கத்தார் செல்லவிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version