ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்ட அந்நாட்டு வீரர்கள் 1,000 பேர், தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள அருகாமை நாடான தஜிகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அவர்கள் தங்கள் நாட்டுக்குள் வந்துள்ள தகவலை, ஒரு செய்திக்குறிப்பு மூலம் தஜிகிஸ்தான் எல்லை காவல் படை உறுதிப்படுத்தியிருக்கிறது.
ஆஃப்கானிஸ்தானில் சமீப வாரங்களாக தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.
அந்த நாட்டை நேட்டோ கூட்டுப்படையினர் பாதுகாக்கத் தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவு பெறும் வேளையில், அன்னிய படையினருக்கு எதிராக தாலிபன்கள் எழுச்சி பெற்றுள்ளனர்.
முன்னதாக, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அல் காய்தா அல்லது வேறு தீவிரவாத குழுக்கள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று அந்த இயக்கத்தினர் அளித்த உறுதிமொழயின்பேரில், ஆஃப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கா, நேட்டோ கூட்டுப்படை அங்கிருந்து வெளியேற கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டன.
ஆஃப்கானிஸ்தானில் செப்டம்பர் மாதத்துக்குள் எஞ்சிய வெளிநாட்டு படையினர் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.
இதனால், தாலிபன் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் இதுநாள்வரை வெளிநாட்டு துருப்புகளின் உதவியுடன் போரிட்டு வந்த ஆஃப்கன் படையினர் பலவீனம் அடையலாம் என்ற கவலை அதிகரித்தது.
இந்த நிலையில், ஆஃப்கானிஸ்தான் எல்லையில் கண்காணிப்பை கவனித்து வரும் தஜிகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கமிட்டி, திங்கட்கிழமை காலையில் தங்கள் எல்லைக்குள் ஆஃப்கானிஸ்தான் படையினர் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் இரவு முழுவதும் அவர்கள் தாலிபன் ஆயுதமேந்திய தீவிரவாதிகளுடன் சண்டையிட்ட பிறகு தங்கள் பகுதிக்குள் வந்ததாகவும் தெரிவித்துள்ளது.
ஆஃப்கானிஸ்தானில் பத்தில் மூன்று பங்கு இடத்தை தாலிபன்கள் கட்டுப்படுத்தி வருகின்றனர். அவர்கள் அன்றாடம் மேலும் சில பகுதிகளை கைப்பற்றி வருகிறார்கள்.
குறிப்பாக, தஜிகிஸ்தான் எல்லைக்கு வெகு அருகே உள்ள பாதக்ஷான், தக்கார் மாகாணங்களில் தாலிபன்கள் வெகுவாக முன்னேறி வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் படையினர் தஜிகிஸ்தான் எல்லைக்குள் தஞ்சம் அடைந்து கடந்த மூன்று நாட்களில் இது மூன்றாவது முறை. கடந்த இரு வாரங்களில் இது ஐந்தாவது முறையாகும்.
ஆஃப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளை எதிர்கொள்ள முழு திறன் பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கானி வலியுறுத்தி வருகிறார்.
அதே சமயம், அந்த நாட்டு படையினர் பலரும் சமீப காலமாக பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் எல்லைக்குள் தஞ்சம் அடைவதாக தகவல்கள் வருகின்றன.
ஆஃப்கானிஸ்தானில் தாக்குதல்கள் தீவிரமானால், போர் நடக்கும் இடங்களில் வாழும் மக்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள மத்திய ஆசிய நாடுகளை நோக்கி அகதியாக தஞ்சம் அடையலாம் என்ற நிலையும் நிலவுகிறது.
பிபிசியின் சர்வதேச தலைமை செய்தியாளர் லீஸ் டூசெட், ஆஃப்கானிஸ்தானில் உள்ள மக்களின் வாழ்க்கை நிச்சயமற்றதாக உள்ளது என்று கூறியுள்ளார்.
இவர்களின் தாய்நாடு எதை நோக்கிச் செல்கிறது என்பது நிச்சயமற்று உள்ளது. தங்களின் சொந்த கிராமம், நகரம், தங்களின் குடும்பம் மற்றும் வாழ்க்கை என்னவாகும் என்பதை அறியாதவர்களாக இவர்கள் உள்ளனர் என்கிறார் லீஸ் டூசெட்.
எனினும், தீவிரமாகும் வன்முறைக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று தாலிபன் தரப்பு செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
பல மாவட்டங்களில், போரிட ஆஃப்கானிஸ்தான் படையினர் மறுத்து விட்டதால், மத்தியஸ்தம் மூலமே அவை தங்கள் வசம் வந்ததாக சுஹைல் ஷாஹீன் கூறியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தாலிபன்களை 2001ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை அகற்றியது.
அமெரிக்காவில் 9/11 தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒசாமா பின் லேடன், அல் காய்தாவைச் சேர்ந்தவர்களுடன் தாலிபன்கள் சேர்ந்து செயல்பட்டதால் அங்கு ஆக்கிரமிப்பு செய்து புதிய ஆளுகையை அமெரிக்கா நிறுவியது.
மேற்கு நாடுகளுக்கு எதிரான வெளிநாட்டு ஜிஹாதிகளின் முகாமாக ஆஃப்கானிஸ்தான் மாற்றப்படாது என்பதை அமெரிக்க படையினர் உறுதிப்படுத்தி விட்டதால், அந்த நாட்டில் இருந்து தமது படையினர் விலக்கிக் கொள்ளப்படுவது சரியானது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார்.