ஆதாம், ஏவாள் தோன்றிய காலத்தில் இருந்தே காதல் என்ற ஒரு விஷயம் இன்னும் அழியாத அழகிய உணர்வாக உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறது. தனது காதலுக்காக ஒருவர் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பார்கள்.
இதனை வெளியில் இருந்து பார்க்கும் நபர்களுக்கு பைத்தியக்காரத்தனமாக தெரியும். அதேபோல, இன்றைய காலகட்டத்தில் கூட காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்கள் உண்டு.
இப்போது கூட எண்ணற்ற பெண்கள் தங்களது பெற்றோர் கட்டாயத்தால் காதலை தியாகம் செய்து, வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்கின்றனர்.
இதனால் எத்தனையோ ஆண் மகன்கள் மனமுடைவதை நாம் காணலாம். சிலர் தனது காதலி எங்கிருந்தாலும் நன்றாக வாழ்ந்தால் போதும் என்று நினைப்பார்கள். மேலும் சிலர் எதையாவது செய்து காதலியின் திருமணத்தை நிறுத்திவிட நினைப்பார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. ஆனால், அதுவும் தவறாகவே முடிந்துள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள படோஹி எனும் மாவட்டத்தில் ஒருவர் தனது காதலியின் திருமணத்தின் போது எப்படியாவது அவரை சந்தித்து பேச வேண்டும் என்ற ஆசையில் படப்பாணியில் தரமான ஒரு சம்பவத்தை யோசித்துள்ளார்.
தனது காதலி வேறொருவரை திருமணம் செய்து கொள்ளும் அதேவேளையில், காதலியின் வீட்டிற்குள் நுழைய திருமண உடை அணிந்து மணப்பெண்ணாக மாறுவேடத்தில் நுழைந்துள்ளார்.
இருப்பினும், அங்கிருந்த பெண்ணின் உறவினர்கள் அவரை அடையாளம் கண்ட உடன், வெளியே காத்திருந்த தனது இரண்டு நண்பர்களுடன் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
அவர் அந்த திருமணத்தை நிறுத்த வந்தாரா?, மணப்பெண்ணை தன்னோடு அழைத்து செல்ல வந்தாரா? அந்த நபரின் செயலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் இன்னும் அறியப்படவில்லை.
இது குறித்து, டி.என்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அந்த நபர் சிவப்பு திருமண சேலை அணிந்து கொண்டு சவுரி முடி மற்றும் ஒப்பனை அலங்காரங்கள் செய்து கொண்டு, முக்காடு அணிந்தபடி மணப்பெண்ணை போல காதலியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
மேலும் யாருக்கும் சதேகம் வரக்கூடாது என்பதற்காக ஒரு சிறிய ஹாண்ட் பேக் மற்றும் பெண்கள் அணியும் செருப்பு என முழுவதும் பெண்ணாக மாறியிருந்தார்.
இருப்பினும், அவரின் சைகைகளும் பேசும் முறையும் மக்கள் மத்தியில் நிறைய சந்தேகங்களை எழுப்பின. அவர் மணமகளை பற்றி அங்கிருந்த உறவினர்களிடம் கேட்டுள்ளார்.
மேலும் மணமகளை பார்க்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். அந்த நபரின் கேள்விகளை தொடர்ந்து சிவப்பு சேலையில் இருப்பது உண்மையில் ஒரு பெண்ணா இல்லையா என்று எல்லோருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் அவரைப் பின்தொடரத் தொடங்கினர்.
பின்னர் அவரை மடக்கி பிடித்து முக்காடை அகற்ற செய்தனர். பிறகு, அவர் ஒரு பெண்ணாக மாறுவேடமிட்ட ஒரு ஆண் என்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் அவரது சவுரி முடியும் கீழே விழுந்தது.
இதையடுத்து அங்கிருந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த இளைஞர் தனது இரண்டு நண்பர்களுடன் தப்பி ஓடிவிட்டார்.
அவர் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடியதால் இதுவரை போலீசில் எந்த ஒரு புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு மனிதன் தன் காதலியைச் சந்திக்க இயல்பைத் தாண்டியது இது ஒன்றும் முதல் முறை அல்ல.
சமீபத்தில், ஒரு அசாம் நபர் கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் தனது காதலியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக அந்த பகுதியின் நீதிபதி போல நடித்து மாட்டிக்கொண்டார். இந்த சம்பவம் அசாமின் ஜோர்ஹாட்டில் நடந்துள்ளது.