தம்மை வீட்டை விட்டு விரட்டியடித்த கள்ளக் காதலியிடமிருந்து தமது உடைமைகளையும் தான் இறுதியாக வாங்கிக் கொடுத்த கட்டா கருவாட்டையும் மீளப் பெற்றுத்தரும்படி 65 வயதான நபர் ஒருவர் கட்டுகஸ்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நபர் பிலிமத்தலாவ, கிராகம பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் கட்டுகஸ்தோட்ட பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றில் தங்கியிருந்து அங்கு வசித்த பிக்குவின் வேலைகளைச் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இந்த 65 வயது நபருக்கு ரணவண பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் கட்டுகஸ்தோட்ட ரணவண வீதியில் வீடு ஒன்றை வாடகைக்குப் பெற்று குடியிருந்துள்ளனர்.
இக்கால கட்டத்தில் இருவருக்குமிடையே அடிக்கடி சச்சரவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த நபரை கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் வீட்டைவிட்டு விரட்டியடித்துள்ளார்.
பின்னர் இந்த நபர் கட்டுகஸ்தோட்ட பொலிஸ் நிலையத்துக்குச் சென்று கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணுடன் தாம் தொடர்ந்து வாழ நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவ்வாறு இல்லாவிட்டால் அந்த வீட்டிலுள்ள தமது உடைமைகளையும் இறுதியாக தாம் அப்பெண்ணுக்கு வாங்கிக்கொடுத்த கட்டா ரக கருவாட்டையும் பெற்றுத்தருமாறும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி இந்த நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணை தேடிச்சென்ற பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து அவரிடமிருந்த 65 வயதான நபரின் கட்டா கருவாடு உட்பட உடைமைகளை அந்த நபரிடம் ஒப்படைக்கும்படி தெரிவித்து இருவரையும் அனுப்பி வைத்தனர்.