பேரிகார்டை சாலையில் தீப்பொறி பறக்க இழுத்துச் செல்லும் இளைஞர்கள்
சென்னை சாலையில், தீப்பொறி பறக்க பேரிகார்டை இழுத்து, இளைஞர்கள் சிலர் பைக்கை வேமாக ஓட்டி சாகசம் செய்துள்ளனர். இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகிவருவதால், சம்பந்தப்பட்ட இளைஞர்களைப் பிடிக்க கூடுதல் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
`இளங்கன்று பயமறியாது’ என்பதற்கு ஏற்ப, சென்னை சாலையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை பைக்கில் செல்லும் இளைஞர்கள் இழுத்துச்செல்லும் வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
அந்த வீடியோவில், நள்ளிரவு நேரத்தில் பேரிகார்டை வேகமாக இழுத்துச்செல்வதால் தீப்பொறி பறக்கிறது. அந்த மகிழ்ச்சியில், இளைஞர்கள் சாலையில் பயணிக்கின்றனர்.
ஆனால், அந்த வீடியோவைப் பார்ப்பவர்களின் மனம் பதறுகிறது. அந்த வீடியோகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
29 நொடிகள், 18 நொடிகள் ஓடக்கூடிய வீடியோக்களை துல்லியமாக ஆராய்ந்த போக்குவரத்து போலீஸார், அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனராக அருண் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். புத்தாண்டில் மது அருந்தி வாகனங்களை ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனால், இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிடக் குறைந்தது. இதனால் நிம்மதிப் பெருமூச்சு விட்ட போக்குவரத்து போலீஸாருக்கு, பேரிகார்டை துணிச்சலாக இழுத்துச்செல்லும் இளைஞர்களால் தலைவலி ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே, சென்னையில் கார், பைக் ரேஸில் ஈடுபடுவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், பேரிகார்டை இழுத்துச்செல்லும் இளைஞர்கள்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கூடுதல் கமிஷனர் அருணிடம் கேட்டபோது, “பேரிகார்டை இழுத்துச்செல்லும் இளைஞர்களை அடையாளம் காண உத்தரவிட்டுள்ளேன்.
அவர்கள் இழுத்துச்செல்லும் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகள் ஆராயப்பட்டுவருகின்றன. அவர்கள் குறித்த விவரங்கள் தெரிந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.