இலங்கையில் தற்போதுள்ள நிலையை மாற்றியமைக்க 4 முக்கிய கருத்துக்களை முன்னெடுக்க வேண்டும் என பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் உறுப்பினரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான Deirder McConnell தெரிவித்துள்ளார்.
அவை, அரசியலமைப்பு சீர்திருத்தம், இடைநிலை நீதி, பொருளாதார மீட்பு மற்றும் பாதுகாப்பு துறை சீர்திருத்தம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் சபையின் பக்க அறையில் இடம் பெற்று வரும் கூட்ட தொடரில் இலங்கை விடயம் தொடர்பில் விவாதிக்கப்பட்ட போது அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலம் மிகவும் கொடுமையானதும் ஊழல் மிகுந்ததுமாக அமைந்திருந்தது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் அரசியலமைப்பில் எவ்வித சீர்திருத்தமும் நடைபெறவில்லை. சில பாராட்டத்தக்க முயற்சிகளை புதிய அரசு முன்னெடுத்திருந்தாலும் பல்வேறான வரம்புகள் இருப்பதாக தெரிய வருகிறது.
அதுமட்டுமின்றி நாட்டின் முக்கிய பகுதிகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இப்போதும் உள்ளது. இது கடந்த காலங்களில் அதிகரித்தவண்ணமே உள்ளது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகவே உள்ளது. இது மிகவு முக்கியமாக களையப்படவேண்டிய ஒன்று என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.