இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராத் கோஹ்லிக்கும் பொலிவூட்டின் முன்னிலை நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா சர்மாவுக்கும் இடையிலான காதல் முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
27 வயதான விராத் கோஹ்லி இந்திய அணியின் முன்னிலை துடுப்பாட்ட வீரராக திகழ்வதுடன் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராகவும் விளங்குகிறார்.
27 வயதான நடிகை அனுஷ்கா சர்மா பொலிவூட்டின் பல வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்ததுடன் திரைப்பட தயாரிப்பாளராகவும் விளங்குகிறார்.
இவ்விருவரும் சுமார் 3 வருடங்களாக காதலித்து வந்தனர். 2013 ஆம் ஆண்டு விளம்பரப் படப்பிடிப்பொன்றில் இணைந்து பங்குபற்றியபோது இவர்களுக்கிடையிலான காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது.
தமது காதல் குறித்து இந்த ஜோடி வெளிப்படையாக பேசுவதை ஆரம்பத்தில் தவிர்த்த போதிலும் இவர்களின் காதல் பகிரங்க இரகசியமாகவே இருந்தது.
விராத் கோஹ்லி பங்குபற்றும் கிரிக்கெட் போட்டிகளை அரங்குகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு வந்த அனுஷ்கா சர்மா, பின்னர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெற்ற பல வைபவங்களில் கோஹ்லியுடன் இணைந்து பங்குபற்ற ஆரம்பித்தார்.
கோடிக்கணக்கான விளையாட்டு மற்றும் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த இந்த ஜோடி பல்வேறு தரப்பினராலும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வந்தது. இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்வர் எனவும் பலர் எதிர்பார்த்தனர்.
ஆனால், கோஹ்லியும் அனுஷ்கா சர்மாவும் தற்போது பிரிந்துவிட்டனர் என்ற தகவல் இவர்களின் ரசிகர்கள் பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தாம் இருவரும் பிரிந்துவிட்டதாக கோஹ்லியோ, அனுஷ்காவோ உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், இவர்களின் உறவு முறிவடைந்துள்ளதை வெளிப்படுத்தும் பல விடயங்களை பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இன்ஸ்டகிரம் சமூக வலைத்தளத்தில் தமது புகைப்படங்களை வெளியிடுவதில் இருவரும் ஆர்வம் காட்டுபவர்கள். அண்மையில் இருவரும் பரஸ்பரம் மற்றவரின் இன்ஸ்டகிரம் பக்கத்திலிருந்து அன்ஃபலோ செய்து கொண்டனர்.
‘ஹார்ட் புரொக்கன்’ என குறிப்பெழுதப்பட்ட தனது புகைப்படமொன்றை இன்ஸ்டகிராம் பக்கத்தில் தரவேற்றிய கோஹ்லி பின்னர் அப் படத்தை அழித்திருந்தார்.
இப்போது அப் படத்தை அவர் மீண்டும் வெளியிட்டுள்ளார். அதேவேளை, நடிகர் அன்காத் பேடி நடத்திய விருந்து நிகழ்வில் கலந்துகொண்ட விராத் கோஹ்லி, ‘ஐ யேம் சிங்கிள், லெட்ஸ் டான்ஸ்’ எனக் கூறி குத்தாட்டம் போட்டாராம்.
அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்தவராக அறியப்பட்ட விராத் கோஹ்லி. தான் ‘சிங்கிள்’ என பிரகடனப்படுத்தியமை அவரின் காதல் முறிந்துவிட்டதை வெளிப்படுத்துவதாகவே பலரும் கருதுகின்றனர்.
இக் காதல் முறிவுக்கு என்ன காரணம் என்பது தொடர்பில் பொலிவூட் மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் அடிபடுகின்றன.
இருவரும் தமது தொழில்சார் வாழ்க்கையில் தீவிர கவனம் செலுத்துவதற்காக பிரிந்துள்ளனர் என்கின்றனர் சிலர்.
உடனடியாக திருமணம் செய்து கொள்வதற்கு அனுஷ்கா சர்மா தயார் நிலையில் இல்லை எனக் கூறப்படுகிறது. விராத் கோஹ்லி பஞ்சாபி இனத்தைச் சேர்ந்தவர். திருமணம் செய்துகொள்ளவுள்ள பஞ்சாபி ஆண்கள் தாடி வளர்த்துக் கொள்வது பாரம்பரியமாகும்.
திருமண வைபவத்தின்போது பஞ்சாபி மணமகன்கள் தாடியுடனேயே தோன்றுவது வழக்கம். ஆனால், விராத் கோஹ்லி தாடியை மழித்துவிட்டார்.
திருமணம் செய்துகொள்வதற்கான விராத் கோஹ்லியின் முன்மொழிவை அனுஷ்கா சர்மா நிராகரித்து விட்டமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.