புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியில் 24 ஆண்டு நட்சத்திர வீரராக வலம் வந்து ரசிகர்களின் மனதில் கிரிக்கெட் கடவுளாக திகழ்ந்த சச்சின், சர்வதேச போட்டிகளில் சதத்தில் சதம் உள்பட பல்வேறு சாதனைகள் படைத்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மும்பையில் தனது 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் சச்சின் ஓய்வு பெற்றார்.
அன்றைய தினம் மத்திய அரசு பாரத ரத்னா விருது சச்சினுக்கு வழங்கப்படும் என அறிவித்தது. ஏற்கனவே, இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் அசத்திய மறைந்த ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த்துக்கு, பாரத ரத்னா விருது தர வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்த நிலையில் சச்சினுக்கு விருது அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சச்சினுக்கு இவ்விருது வழங்கப்பட்ட நடைமுறைகள் குறித்து தெரிவிக்குமாறு, விளையாட்டு ஆர்வலர் ஹேமந்த் துபே என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ) மூலம் விண்ணப்பித்தார்.
இதற்கு மத்திய அரசு அளித்த பதிலில், சச்சின் குறித்த விவரங்களை அனுப்புமாறு, கடந்த 2013 நவம்பர் 14ம் தேதி மதியம் 1.35 மணிக்கு, மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் பேக்ஸ் அனுப்பியது. மாலை 5.22 மணிக்கு சச்சினின் விவரங்களை பிரதமர் அலுவலகம் பெற்றது. பின்னர் இது விளையாட்டுத் துறை செயலரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மறுநாள் 15ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தனது தரப்பு வேலைகளை முடித்து, சச்சினுக்கு பாரத ரத்னா தருவது குறித்த செயல் திட்டத்துக்கு ஒப்புதல் தர வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பினார்.
இந்த பணிகள் அனைத்தும் சுமார் 24 மணி நேரத்தில் முடிந்தது. இதை தொடர்ந்து நவம்பர் 16ம் தேதி விருது பற்றிய அறிவிப்பு வெளியானது. 17ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், சச்சினுக்கு கடிதம் மூலம் இதை தெரியப்படுத்தினார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில், சச்சினுக்கு பாரத ரத்னா விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவும் பாரத ரத்னா விருது பெற்றார்.
இந்த விருதை குறைந்த வயதில் பெற்ற மற்றும் முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையையும் சச்சின் படைத்தார். விழாவில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சச்சினின் மனைவி அஞ்சலி, மகள் சாரா உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். –