தமிழ் மக்களினால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெனிவா பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அலுவலகம் விசாரணை நடத்தும் வகையில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்துள்ளன. இந்த வாக்கெடுப்பில் 12 நாடுகள் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்துள்ளன.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் கடந்த 3ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று 28ஆம் திகதியுடன் முடிவடைந்திருக்கின்றது. அமெரிக்கா, பிரிட்டன், மெசடோனியா, மொன்டேக்நரோ மற்றும் மொரிசியஸ் ஆகிய 5 நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிரான பிரேரணை வரைபினை ஐ.நா. மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமான அன்றே சமர்ப்பித்திருந்தன.
இந்த பிரேரணை வரைபு தொடர்பில் 3 தடவைகள் திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த புதன்கிழமை இறுதிப் பிரேரணை வரைபு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
நேற்றுமுன்தினம் பிரேரணை வாக்கெடுப்புக்குவிடப்பட்டபோது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று இந்தியா திடீரென அறிவித்தது.
இந்தியாவின் இந்த முடிவானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் முதல் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்குமா இல்லையா என்ற சர்ச்சை நீடித்திருந்தது.இந்தப் பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்கவேண்டுமென்று தமிழகத்தில் பெரும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இந்தநிலையில் அந்தப் பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்கியிருந்தது.
இதேபோல் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக மற்றொரு பிரேரணையினை அமெரிக்கா சமர்ப்பித்திருந்தது.
இந்தப் பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்குமா இல்லையா என்ற சர்ச்சை வலுவடைந்திருந்தது. பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் என்று தமிழகத்தில் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
மாணவர்கள் உட்பட அரசியல் கட்சிகளின் தொண்டர்களும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து இந்தியா 2013ஆம் ஆண்டும் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு வழங்கியிருந்தது.
இத்தகையதொரு நிலையில் இம்முறையும் இந்தியா இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு வழங்கும் என்றே சகல தரப்பினரும் எதிர்பார்த்திருந்தனர்.
ஏனெனில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்திருந்த நிதியமைச்சர் ப. சிதம்பரம் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்று தெரிவித்திருந்தார்.
இதேபோல் மத்திய அமைச்சர்கள் பலரும் கருத்துகளை தெரிவித்திருந்தனர். இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை கடந்த 3ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து இந்திய மத்திய இணையமைச்சர் நாராயணசாமி மற்றும் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் ஆகியோர் ஜெனிவா பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.
மத்திய அமைச்சர்களின் இந்தக் கருத்துக்களும் ஜெனிவா பிரேரணைக்கு இந்தியா நிச்சயம் ஆதரவு வழங்கும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருந்தது.
அண்மையில் கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, டலஸ் அழகப்பெரும உட்பட பலரும் இந்தியா பிரேரணைக்கு ஆதரவு வழங்கும் எண்ணப்பாட்டிலேயே கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு இலங்கை அரசாங்கமே ஜெனிவா பிரேரணைக்கு இந்தியா ஆதரவு வழங்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இந்தியா தனது முடிவினை மாற்றிக்கொண்டிருக்கின்றது.
இந்தியாவின் இந்த நிலைப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கின்றது. இதேபோல் தமிழ் தரப்பினருக்கு இந்தியாவின் நிலைப்பாடு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கவலை தெரிவித்திருக்கின்றார். ஜெனிவா பிரேரணை விடயத்தில் இந்தியா நடுநிலைமை வகித்துள்ளமையானது எமக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இந்தியாவின் இந்த முடிவுக்கு ஏதேனும் காரணங்கள் அமையப்பெற்றிருக்கலாம். அவை தொடர்பில் எம்மால் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கமுடியாது. இந்தியா பிரேரணை தொடர்பில் இறுதியான ஒரு முடிவினை எடுக்காது அதனை நிராகரித்துள்ளமை எமக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று சம்பந்தன் எம்.பி. தெரிவித்திருக்கின்றார்.
உண்மையிலேயே ஜெனிவா பிரேணையினை இந்தியா ஆதரிக்கும் என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் செயற்பட்டுவந்தனர்.
இந்த நிலையில் இந்தியா திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளமை தமிழ்க் கூட்டமைப்பினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஆனாலும் அதனை வெளிக்காட்டாத வகையில் நாகரிகமான முறையில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தனது அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றார்.
ஜெனிவா பிரேரணையைப் பொறுத்தவரையில் இந்தியா இத்தகையதொரு முடிவினை ஏன் எடுத்தது என்ற கேள்வி பலமாக எழுகின்றது.
2012ஆம், 2013ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையினை ஆதரித்த இந்தியா தற்போது கொண்டுவரப்பட்ட பிரேரணையினை எதிர்த்து ஏன் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்தது ஏன் என்ற கேள்விகள் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியிலேயே ஏற்பட்டிருக்கின்றது.
கடந்த 2 ஆண்டுகளிலும் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் உள்ளக விசாரணை கோரிக்கையே முன்வைக்கப்பட்டிருந்தது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதுடன் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமான உள்ளக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே இந்தப் பிரேரணைகள் கோரியிருந்தன.
ஆனால் தற்போதைய பிரேரணையானது மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோருகின்றது.
இந்த விசாரணைக்கு இலங்கையானது பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பிரேரணை வலியுறுத்துகின்றது. சர்வதேச விசாரணைக்கு ஒப்பானதாகவே இந்த விசாரணையும் அமையலாம் என்ற கருத்து நிலவிவருகின்றது.
இத்தகைய ஒரு சர்வதேச விசாரணை இலங்கையில் நடைபெறுவதை இந்தியாவானது விரும்பவில்லை என்பதனாலேயே பிரேரணையினை இந்தியா எதிர்த்ததுடன் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்துள்ளது.
ஐ.நா. மனிதஉரிமைப் பேரவையில் இந்தியப் பிரதிநிதி டுலிப் சிங்ஹா கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் மீறப்பட்டுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையில் உள்ளக பொறிமுறையின் கீழ் விசாரணை செய்வதை ஊக்குவிப்பதாக மனித உரிமைப் பேரவையின் செயற்பாடுகள் அமையவேண்டியது அவசியமாகும்.
நாடு ஒன்றின் வெளி விவகாரம் தொடர்பில் வெளிச்செயற்பாட்டை மேற்கொள்வதானது அந்த நாட்டின் உள்ளக செயற்பாடுகளை குழப்புவதாகவே அமையும். இலங்கை குறித்த பிரேரணை உள்ளக செயற்பாடுகளை குழப்புவதாகவே அமையும் என்று தெரிவித்துள்ளார். இதிலிருந்து இந்தியாவின் நிலைப்பாடு பரகசியமாக தெரிகின்றது.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் முடிவடைந்ததன் பின்னர் ஜெனிவாவில் இந்தியப் பிரதிநிதி டுலிப் சிங்ஹாவை சூழ்ந்துகொண்ட.செய்தியாளர்கள் இந்தியாவின் முடிவு தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னையிலிருந்து சென்றிருந்த செய்தியாளர்கள் இவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இலங்கையில் சிங்களவர்களுக்கு ஆதரவாக இந்தியா செயற்பட்டிருக்கின்றது. இதுகுறித்து உங்களின் கருத்து என்ன?
தமிழக மக்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் இந்திய அரசின் முடிவு அமைந்திருக்கின்றது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என பல்வேறு வகையான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இதற்கு மழுப்பலான பதில்களை வழங்கிய இந்திய பிரதிநிதி இறுதியில் இந்தியாவின் தேசிய நலனைக் கருத்தில்கொண்டே இத்தகைய முடிவினை எடுத்ததாக அவர் தெரிவித்திருக்கின்றார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் இடம்பெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைவது நிச்சயம் என்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.
தமிழகத்தில் காங்கிரசுடன் மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க.வோ அல்லது தி.மு.க.வோ கூட்டணி சேரவில்லை. இதன் காரணமாக காங்கிரசுக்கு ஒரு ஆசனம் கூட கிடைப்பதென்பது சந்தேகமே.
இந்த நிலையில் தமிழக மக்களின் கருத்துக்கள் தொடர்பில் இம்முறை மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்றே தெரிகின்றது.
ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு வழங்கவேண்டுமென்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் கோரிக்கை விடுத்திருந்தன.
ஆனாலும் தமழக அரசியல் கட்சிகளை உதாசீனம் செய்யும் வகையிலேயே மத்திய அரசின் தீர்மானம் அமைந்திருக்கின்றது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது பாகிஸ்தான் பிரதிநிதி ஒழுங்குப் பிரச்சினையை கிளப்பியிருந்தார்.
பிரேரணையின் 10ஆவது பந்தியை நீக்கவேண்டுமென்று அவர் வாதிட்டார். பிரேரணையின் 10ஆவது பந்தியில் மனித உரிமை மீறல்கள் மறறும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்துக்கு இலங்கை பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பந்தியினை நீக்கவேண்டுமென பாகிஸ்தான் கோரியதையடுத்து இதற்கென வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியாவும் ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதிலிருந்தும் சர்வதேச விசாரணையினை இந்தியா விரும்பவில்லை என்று தெட்டத் தெளிவாகின்றது.
மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையினை சமர்ப்பித்த பின்னர் அமெரிக்காவினால் இவ்விடயம் தொடர்பில் 3தடவைகள் உபகுழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இதில் கலந்துகொண்ட இந்தியப் பிரதிநிதி மௌனம் காத்திருந்தார். எத்தகைய கருத்துக்களையும் அவர் தெரிவித்திருக்கவில்லை. இந்தநிலையில் அமெரிக்க பிரேரணையில் 3ஆவது திருத்தம் இந்தியாவின் தலையீட்டினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதாவது முன்னைய பிரேரணை வரைபில் விசாரணைக்கான காலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை. இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றிருந்த மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே விசாரணை நடத்தப்படவேண்டுமென்று கோரப்பட்டிருந்தது.
இந்தியாவின் தலையீட்டையடுத்து அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழு கவனம்செலுத்திய காலப்பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற திருத்தம் செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு பிரேரணையில் திருத்தங்களையும் செய்துவிட்டு இறுதிநேரத்தில் இந்தியா பாகிஸ்தானுடன் இணைந்து பிரேரணையின் 10ஆவது பந்தியை நீக்க முயற்சித்ததுடன் வாக்கெடுப்பிலும் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்திருக்கின்றது.
இந்திய தேசிய நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவினை எடுத்துள்ளதாக இந்தியா தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்துகின்றது.
இந்தியாவின் இந்த முடிவானது அமெரிக்காவுக்கும் எதிரானதாகவே அமைந்திருக்கின்றது. பிரேரணை சமர்ப்பிப்பதற்கு முன்னர் தெற்காசியவிவகாரங்களுக்கான அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் விஷ்வால் புதுடில்லிக்கு விஜயம் செய்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
இந்தியா அத்தகைய முடிவினை எடுத்தமைக்கு இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவதும் ஒரு காரணமாக இருக்கலாம். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது.
இந் நிலையில் இலங்கையை தனது கண்காணிப்பில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமானால் சர்வதேச விசாரணை விவகாரத்திலிருந்து இலங்கையைக் காப்பாற்றுவதற்கான சமிக்ஞையை இந்த முடிவின் மூலம் இந்தியா- இலங்கை அரசுக்கு வழங்கியிருக்கலாம்.
ஏனெனில் இந்தியாவின் இந்த முடிவானது இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கின்றது.
இந்த முடிவையடுத்து இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உத்தரவிட்டிருக்கின்றார்.
இதிலிருந்து இந்தியாவுடனான உறவினை பலப்படுத்த இதிலிருந்து இந்தியாவுடனான உறவினை பலப்படுத்த அவர் சமிக்ஞை காண்பித்துள்ளதாகவே தெரிகின்றது.
எனவே எதிர்காலத்தில் இந்திய இலங் கை உறவு வலுவடையும் சூழலும் ஏற்பட்டிருக்கின்றது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் தரப்பு வலியுறுத்திவந்தநிலையில் இந்த விவகாரத்தில் இந்தியா குத்துக்கரணம் அடித்துள்ளமை தமிழ் தரப்பினரது கோரிக்கையில் பலவீனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
யுத்தத்தின்போது பெரும் உதவிகளை வழங்கி யுத்த வெற்றிக்கு வழிவகுத்த இந்தியா எதிர்காலத்தில் இலங்கை தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை காட்டி அவர்களின் எதிர்காலத்துக்கும் சுபீட்சமான வாழ்வுக்கும் அத்திவாரமிட வேண்டும்.
இதனைவிடுத்து எல்லாம் தேசிய நலன் என்று கருதி இந்தியா செயற்படுமானால் இலங்கை வாழ் தமிழ் மக்களின் வெறுப்புக்கு உள்ளாகவேணடிய நிலை இந்தியாவுக்கு ஏற்படலாம்.
எனவே கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை இந்தியா பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு ஏதாவது உருப்படியான காரிமொன்றினை செய்வதற்கு இனியாவது இந்திய மத்திய அரசு முன்வரவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-அன்பரசன்-