இலங்கை அரசாங்கத்தின் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை கனடாவில் பாதிப்பை ஏற்படுத்தாது என அந்நாடு தெரிவித்துள்ளது.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடையானது நல்லிணக்க முனைப்புக்களை மேலும் பாதிக்கும் என கனடா சுட்டிக் காட்டியுள்ளது.
16 புலம்பெயர் அமைப்புக்களையும், 424 தனிப்பட்ட நபர்களையும் இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளது.
இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தி வருவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் கருத்துக்களை வெளியிட கனடாவில் எவ்வித தடையும் கிடையாது என அறிவித்துள்ளது.
எவ்வாறெனினும், இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள கனேடியர்களிடம் கேள்வி எழுப்பபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களில் புலம்பெயர் தமிழ் மக்கள் முக்கிய பங்காற்றி வருவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான சகல நடவடிக்கைகளும் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சகலவிதமான பயங்கரவாத செயற்பாடுகளையும் கனடா எதிர்ப்பதாக அமைச்சர் ஜோன் பெயார்ட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.