நடிகர் நாசரின் மகன் உட்பட ஐவர் சென்ற கார் விபத்திற்குள்ளானதில் மூவர் பலியானதுடன் நாசரின் மகன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை மகாபலிபுரம் அருகே இடம்பெற்றுள்ளது.
நடிகர் நாசரின் மகன் பைசல் ‘சைவம்” படத்தில் பாஷா என்ற பெயரில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் இன்று காலை 4 பேருடன் காரில் சென்றுள்ளார். அவர்கள் சென்ற கார் மகாபலிபுரம் அருகே உள்ள மணமை கிராமத்தில் சென்று கொண்டிருக்கையில் விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த 3 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த பைசல் மற்றும் ஒருவர் கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பைசலின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. படுகாயமடைந்த மற்றும் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்த தகவல் கிடைத்த உடன் நாசர் தனது மனைவி கமீலாவுடன் மருத்துவமனைக்கு விரைந்தார். கார் விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இன்று காலை 8 மணி அளவில் ஒரு கார் கிழக்கு கடற்கரை சாலையில் வந்தது. சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி லொறி சென்றது. திடீரென்று மாமல்லபுரத்தை அடுத்த மணமை அருகே லொறி மீது கார் மோதியது.
இதில் மூவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். உயிருக்கு போராடிய 2 பேரை செங்கல்பட்டு வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கேளம் பாக்கத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. 3 பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உள்ளது.
காயம் அடைந்த 2 பேரில் ஒருவர் நடிகர் நாசரின் மகன் பைசல் என்பதும் மற்றொருவர் சண்முக சுந்தரம் என்பதும் தெரிய வந்துள்ளது. பலியானவர்களில் ஒருவர் நடிகர் நாசரின் நெருங்கிய உறவினரின் மகன் என்றும் கூறப்படுகிறது. அனைவரும் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய போது விபத்தில் சிக்கி இருக்கலாம் என்று தெரிகிறது.
நாசரின் மகன் பைசல் ‘சைவம்” என்ற புதுப்படத்தில் நடித்து வந்தார். விபத்தில் சிக்கிய லொறியின் சாரதி மாமல்லபுரம் பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.