ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எல்லோருமே புகைப்படம் எடுக்கிறோம்- ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால், பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்லூரி மாணவி ஒருவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட புகைப்படம் இணையத்தின் மனசாட்சியையே உலுக்கியிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தின் நாயகனான ஏழை சிறுவனை, ஊக்கத்தின் அடையாளம் என மனதார பாராட்டுகிறது.

அதைவிட முக்கியமாக அந்த சிறுவனுக்கு உதவிகள் குவிந்து ,அவனது வாழ்க்கையையே மாற்றி இருக்கிறது. எல்லாம் அந்த ஒரு புகைப்படத்தால் நிகழ்ந்த மாற்றம்! அந்த புகைப்படத்தை பார்த்தால் நீங்களும் கூட உருகித்தான் போவீர்கள்!

ஒரு சிறுவன்,  டெஸ்க் முன் அமர்ந்து மங்கிய விளக்கொளியில் வீட்டுப்பாடம் செய்து கொண்டிருக்கும் புகைப்படம்தான் அது. சாதாரணமாக பார்த்தாலே கூட அந்த சிறுவனின் ஆர்வம் கவரக்கூடியதாகதான் இருக்கும். ஆனால், இந்த புகைப்படத்தின் பின்னணிதான் முக்கியமானது.

அந்த சிறுவன் அமர்ந்திருக்கும் இடம் வீடு அல்ல வீதி. ஆம், வசிப்பதற்கு வீடு கூட இல்லாத அந்த ஏழை சிறுவன், சாலையோரமாக அமர்ந்து அருகே உள்ள மெக்டொனால்ட்ஸ் ரெஸ்டாரண்ட் விளக்கு வெளிச்சத்தின் ஒளியில் சிரத்தையாக வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்தான்.

ஆர்வம் மற்றும் அர்பணிப்பு ஆகியவற்றின் அடையாளமாக விளங்கிய அந்த காட்சியை தற்செயலாகப்பார்த்த ஜாய்ஸ் டோரேபிரான்கா எனும் மருத்துவக்கல்லூரி மாணவி, தன்னை அறியாமல் ஸ்மார்ட்போனில் கிளிக் செய்து கொண்டார்.

வறுமை வாட்டும் நிலையை மீறி சாலையோரத்தில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த அந்த சிறுவனின் ஆர்வம் அவரை அசர வைத்தது.

மறுநாள் இந்த புகைப்படத்தை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். ‘இந்த சிறுவனைப்பார்த்து நான் ஊக்கம் பெற்றேன்’ என்றும் அந்த புகைப்படத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

அந்த புகைப்படத்தை பார்த்த பலரும், சூழலை மீறி அந்த சிறுவன் காட்டிய கல்வி ஆர்வத்தால் கவரப்பட்டு, ஊக்கம் பெற்று அந்த படத்தை தங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொண்டனர்.

இப்படியே அந்த படம் அடுத்தடுத்து 7,000 முறைக்கு மேல் பகிரப்பட்டு ஃபேஸ்புக் முழுவதும் பரவியது. அப்படியே உள்ளூர் தொலைக்காட்சி சேனலிலும் ஒளிப்பரப்பாகி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது.

அனைவரும் இந்த சிறுவனை ஊக்கத்தின் அடையாளமாக குறிப்பிட்டனர். மோசமான வாழ்க்கை சூழலிலும்,  படிப்பில் கவனம் செலுத்தும் சிறுவனின் மன உறுதியை பாராட்டினர்.

இன்னும் சிலரோ எல்லா வசதி வாய்ப்புகள் இருந்தும் வீட்டுப்பாடம் செய்யவும், படிக்கவும் முரண்டு பிடிக்கும் மாணவர்கள், இந்த சிறுவனை பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

இணைய உலகில் இப்படி தீவிர விவாதத்தை ஏற்படுத்திய அந்த சிறுவனை, உள்ளூர் தொலைக்காட்சி தேடி கண்டுபிடித்து செய்தி வெளியிட்ட போது அவனைப்பற்றிய மேலும் விவரங்கள் தெரியவந்தது.

பிலிப்பைன்ஸின் மத்திய மாகாணமான செபுவில் உள்ள மாண்டேயு எனும் பகுதியில்,  சிறுவன் தனது அம்மா மற்றும் சகோதரருடன் வசிக்கிறான்.

denial02அவனது பெயர் டேனியல் கேப்ரேரா. வயது 9. சிறுவனின் அப்பா சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அம்மா ஸ்பினோசாதான் கிடைத்த வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில், சாலையோரத்தில் இருக்கும் தற்காலிக ஷெட்டில் வசித்து வருகின்றனர்.

ஆனால், இந்த வறுமை நிலையிலும் சிறுவன் கேப்ரேரா விடாமல் பள்ளிக்கு சென்று படித்து வருகிறான். வீடு இல்லாததால் தினமும் சாலையோரத்தில் மெக்டோனால்ட்ஸ் ரெஸ்டாரண்ட் விளக்கு வெளிச்சத்தில் வீட்டுப்பாடம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறான்.

மகனுக்கு படிப்பதில் மிகுந்த ஆர்வம் என்றும், படித்து முடித்து காவலராக வேண்டும் என்பது அவனது லட்சியம் என்றும் தொலைக்காட்சி பேட்டியில் ஸ்பினோசா கூறியிருந்தார்.

இந்த விவரங்களை எல்லாம் கேள்விப்பட்ட மக்கள் நெகிழ்ந்து போயினர். குறிப்பாக சிறுவன கேப்ரேரா தன்னிடம் இரண்டு பென்சில்கள் மட்டும் இருந்ததாகவும், அதில் ஒன்றை பள்ளியில் மாணவர்கள் திருடிவிட்டதாகவும் கூறியதை கேட்டு மேலும் நெகிழ்ந்தனர்.

இந்த சிறுவன் நன்றாக படித்து முன்னேற உதவி செய்வது தங்கள் கடமை என்று பலருக்கும் இயல்பாக தோன்றியதால் நிதி உதவியும், பொருளுதவியும் குவிந்திருக்கிறது. பலர் சிறுவனின் உதவித்தொகைக்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர் என்றால், சிலர் எழுதுபொருள் மற்றும் மேசை விளக்கு வாங்கி கொடுத்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல் சிறுவனின் கல்விக்கு நிதி திரட்டுவதற்காக என்றே தனி இணைய பக்கமும் துவக்கப்பட்டது; (http://bayanihanproject.com/projects/daniel-crowdfunding-campaign/ )

இந்த எதிர்பாராத உதவிகளால் சிறுவனின் தாய் திக்குமுக்காடி போயிருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்ட கல்லூரி மாணவி ஜாய்ஸ், ‘ஒரு எளிய புகைபப்டம் இந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை’ என்று குறிப்பிட்டு இந்த படத்தை பகிர்ந்து கொண்டவர்களுக்கு எல்லாம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நன்றி தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.

வாழ்க்கையின் சூழலை மீறி ஊக்கத்துடன் செயல்பட,  டேனியல் கதை நமக்கெல்லாம் உதாரணமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மைதானே!

-சைபர்சிம்மன்

Share.
Leave A Reply

Exit mobile version