கர்நாடக மாநிலம் பாதானகோடி (Badanagodi) கிராமத்தைச் சேர்ந்தவர், புட்டவா கொல்லாரா (வயது 75). இவருடன், இவரது பேரன் ரமேஷ் கொல்லாரா வசித்துவந்துள்ளார்.
இவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்துள்ளனர். வெகுநேரமாக கதவுகளைத் தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்தவர்கள், ஜன்னல்களின் வழியே வீட்டினுள் எட்டிப்பார்த்துள்ளனர்.
ஆனால், துர்நாற்றம் அதிகமாக வீசியுள்ளது. இதனால் பதற்றமடைந்தவர்கள், கதவை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அந்த வீட்டின் மற்றொரு அறையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாகக் கிடந்துள்ளார்.
உறவினர்களின் சந்தேகப்பார்வை மூதாட்டியின் பேரன் மீது விழுந்தது. இவர் ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் 2016-ம் ஆண்டு சிறைக்குச் சென்று தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.
எனவே, ரமேஷை கிராமத்தினர் அப்பகுதியில் தேடியுள்ளனர். இதற்கிடையில், கொலைகுறித்து கிராம மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மூதாட்டியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவுசெய்த காவல் துறையினர், ரமேஷ் குறித்த தகவல்களைக் கேட்டுச் சென்றனர்.
அந்தக் கிராமத்தில் இருந்த காலி மனையில் அமைதியாக அமர்ந்திருந்த ரமேஷிடம் மூதாட்டி கொலை செய்யப்பட்டிருப்பது குறித்து கிராம மக்கள் விசாரித்துள்ளனர்.
ஆனால் அவர், அமைதியாகவே இருந்ததால், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு நடந்த ஸ்பெஷல் ட்ரீட்மென்டில், நடந்தவற்றை விவரமாக விவரித்துள்ளார் ரமேஷ். ஆனால், அவர் கூறியவற்றைக் கேட்ட காவல் துறையினருக்குதான் அதிர்ச்சி.
“ஹூலிகம்மா (காவல் தெய்வம்) என் கனவில் வந்தது. பின்னர் என்னை ஹூலிகம்மா ஆட்கொண்டது.
ஒரு புதையல் இருக்கிறது, அதை அடைய வேண்டும் என்றால் ஒரு தலையும், துண்டிக்கப்பட்ட 5 மனித உடல்களையும் எனக்கு காணிக்கையாக்க வேண்டும்” என கூறியதாக போலீஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய காவல் துறையினர், “2016-ல் ஒரு கொலைவழக்கில் கைதாகி ரமேஷ் சிறை சென்றுள்ளார். இரண்டு வருட சிறைவாசத்திற்குப் பிறகு, கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை அன்றே மூதாட்டியைக் கொலைசெய்துள்ளார். துர்நாற்றம் வீசியதால், புதன்கிழமை அன்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இவர், மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் காணப்படுகிறார். அவரை மருத்துவப் பரிசோதனை உட்படுத்த இருக்கிறோம்” என்றனர்.