Site icon ilakkiyainfo

கடல் அலைகளுக்கு நடுவே பிரசவம்! வைரல் வீடியோவுக்கு குவியும் பாராட்டுகளும் விமர்சனங்களும்

ஜோசியின் இயற்கையான பிரசவ முறைக்கு பாராட்டுகள் குவியும் அதே நேரத்தில், அதிலிருந்த அபாயம் குறித்தும் இணையவாசிகள் விமர்சனம் செய்துள்ளனர்.

ஓர் உயிரை பூமிக்கு வரவேற்கும் தாய்மார்களின் வலியும் வேதனையும் சொல்லில் அடங்காதது. பிரசவத்தின்போது தாய்க்கும் சேய்க்கும் எந்த பாதிப்பும் இருக்கக் கூடாதென்பதே மருத்துவர்கள் முதல் குடும்பத்தினர்வரை பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும்.

இந்நிலையில், ஒரு பெண் பசிபிக் பெருங்கடலின் அலைகளின் நடுவே, மருத்துவர் உதவியும் இன்றி குழந்தையைப் பெற்றுள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவருக்கு பாராட்டுகளும், அதே சமயம் விமர்சனங்களும் வந்துள்ளன.

மத்திய அமெரிக்காவில் உள்ள நிக்கராகுவா நாட்டைச் சேர்ந்தவர் ஜோசி பியூகெர்ட். ஜெர்மனியில் இருந்து நிகரகுவாவில் குடியேறியவ இவருக்கு முதல் பிரசவம் மருத்துவமனையிலும், இரண்டாவது பிரசவம் வீட்டிலும் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் தன் அடுத்த குழந்தையை கடலில் யாருடைய உதவியும் இன்றி தனியாகப் பெற்றுக்கொள்ள விரும்பியுள்ளார் ஜோசி. பல வாரங்களாக அங்குள்ள பசுபிக் கடல் அலைகளைக் கண்காணித்துள்ளார். குழந்தை பெற்றுக்கொள்ள கடல் பாதுகாப்பாக இருக்கும் என உறுதிப்படுத்திக்கொண்டார்.

பிப்ரவரி 27-ம் தேதி, பிரசவவலி வந்ததும், மற்ற குழந்தைகளை நண்பர்களுடன் தங்க வைத்துவிட்டு, தன் கணவருடன் பிரசவத்துக்குத் தேவையான துண்டு, தொப்புள் கொடியை எடுக்க சல்லடை என அடிப்படை பொருள்களுடன் கடற்கரைக்குச் சென்று கடல் அலைகளுக்கு நடுவே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் ஜோசி.

பிறந்த குழந்தை ஆரோக்கியமான எடையுடன் இருந்துள்ளது. ஜோசியும் அவரது கணவரும் குழந்தைக்கு, போதி அமோர் ஓஷன் கார்னீலியஸ் எனப் பெயரிட்டுள்ளனர். கடல் அலைகளுக்கிடையில் ஜோசி குழந்தையைப் பெற்றெடுக்கும் 50 நொடி வீடியோ இணையத்தில் வைரலானது.

ஜோசியின் இயற்கையான பிரசவ முறைக்கு பாராட்டுகள் குவியும் அதே நேரத்தில், அதிலிருந்த அபாயம் குறித்தும் இணையவாசிகள் விமர்சனம் செய்துள்ளனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, “எங்கள் வாழ்வின் புதிய ஆன்மாவை வரவேற்பதில் எனக்கு எந்த பயமோ, கவலையோ இல்லை; நான், என் துணை மற்றும் அலைகள் என அந்தத் தருணம் அழகாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version