பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு (ஐ லவ் யூ) தெரிவித்த அதே வகுப்பில் கல்வி கற்கும் சக மாணவனை அதிபர் பிரம்பால் கண்டித்ததையடுத்து மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக அந்த பிரதேச பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரியவருவதாவது;

ஆண், பெண் பிள்ளைகள் கற்றுவரும் கலவன் பாடசாலையில் சம்பவதினமான நேற்று குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்றுவரும் மாணவி ஒருவரை பார்த்து அதே வகுப்பில் கல்விகற்று வரும் மாணவன் (ஐ லவ் யூ) என தெரிவித்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து குறித்த மாணவி பாடசாலை அதிபரிடம் சென்று குறித்த மாணவன் ஐ லவ் யு என தெரிவித்ததாக முறைப்பாடு செய்ததையடுத்து அதிபர் குறித்த மாணவனை தனது காரியாலயத்துக்கு வரவழைத்து பிரம்பால் மாணவன் மீது இரண்டு அடி கொடுத்து ஒழுக்கமாக நடக்குமாறு தெரிவித்து எச்சரித்து அனுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற மாணவன் அதிபர் தனக்கு அடித்துள்ளார் என தெரிவித்ததையடுத்து மாணவனை பெற்றோர் மட்டு.போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அதிபரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சிறுவர் பெண்கள் பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version