பொறுப்புக் கூறலுக்கும் உண்மை , நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்தும் ஆதரிக்கிறது என அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்ணி தெரிவித்துள்ளார்.

தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு கனேடியப் பிரதமர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் ஆயுதப்போர் முடிவடைந்து இன்றுடன் 16 வருடங்கள் ஆகிவிட்டன. 26 வருடங்களுக்கும் அதிகமாக நீடித்த இந்தப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளில், இழந்த உயிர்களையும் சிதறிப்போன குடும்பங்களையும் பேரழிவடைந்த சமூகங்களையும் இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களாகவே இருப்போரையும் நாம் நினைவுகூருகின்றோம்.

அத்துடன் தமது அன்புக்குரியவர்களின் நினைவுகளைச் சுமக்கும் கனேடிய தமிழ்ச் சமூகத்தையும் கனடாவின் பல பகுதிகளிலும் திட்டமிடப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளையும் நாம் மனதிற்கொள்கின்றோம்.

பொறுப்புக்கூறலுக்கும் உண்மை, நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளைக் கனடா தொடர்ந்தும் ஆதரிக்கின்றது.

இந்த நினைவேந்தல் நாளை நாம் கடைப்பிடிக்கும் போது, துணிவுடன் அஞ்சலி செலுத்துவதற்கான உறுதிப்பாட்டையும், நீடித்திருக்கும் அமைதிக்காகச் செயற்படுவதற்கான உறுதிப்பாட்டையும் அது பலப்படுத்தட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version