சவூதி அரேபியாவில் அரசு சார்பில் முதல் மதுபானக் கடை திறக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

உலகில் இஸ்லாமியர்களின் கோட்டையாக விளங்கும் சவூதி அரேபியாவில், மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி மது அருந்துபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில், அரசு சார்பில் முதல் மதுபானக் கடை திறக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்த மதுக்கடையில், முஸ்லிம் அல்லாத வெளிநாட்டுத் தூதர்களுக்கு மது விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு சார்பிலான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளியான தகவல்களின்படி, ’புதிய கடை Riyadh Diplomatic Quarter-இல் சூப்பர் மார்க்கெட்டை அடுத்து அமையும் எனச் சொல்லப்படுகிறது.

இந்த மதுபான கடைக்குள் முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை எனவும், 21 வயதுக்குட்பட்ட நபர்கள் யாரும் கடைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், செயலியில் பதிவு செய்பவர்களுப் பதிலாக பிறருக்கு அனுமதி இல்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அதில், கடைக்குள் மொபைல் போன்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர, ஒதுக்கீட்டு முறையின்கீழ், கடையை அணுக அங்கீகரிக்கப்பட்டவர்கள் மாதத்திற்கு 240 புள்ளிகள் மதுவை வாங்க முடியும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சவூதி அரேபியா அரசு வணிக தளங்கள், சுற்றுலாத் தலங்களைச் சமீபகாலமாக ஊக்குவித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாகவே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மீண்டும் மதுபான விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது மட்டுமின்றி, சட்டவிரோத மதுபான வியாபாரத்தைத் தடுக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும் என அங்குள்ள அதிகாரிகள் கருதுகின்றனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version