ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தில் ஒரு ‘முக்கிய மைல்கல்லை’ எட்டிவிட்டதாகவும், அது அந்நாட்டின் ஒரு மறைமுக அணு ஆயுதமாக மாறிவிட்டதாகவும் சமீபத்திய அரசியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஈரானிடம் தற்போது 60% வரை செறிவூட்டப்பட்ட சுமார் 440 கிலோ யுரேனியம் கையிருப்பில் உள்ளது. இதனை மிகக் குறுகிய காலத்தில் ஆயுதத் தரத்திற்கு மாற்ற முடியும் என்பதால், ஈரான் இப்போது ‘அணு ஆயுத வாசலில்’ (Nuclear Threshold) நிற்பதாகக் கருதப்படுகிறது.
ஈரானின் இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியானது, இனிமேல் அந்நாட்டை ஒரு சாதாரண இராணுவ சக்தியாக அமெரிக்காவால் பார்க்க முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது.
இந்த அதிரடி மாற்றத்தால், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தனது ஈரானியக் கொள்கையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
“ஈரான் அணு ஆயுதம் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறி வந்த அமெரிக்கா, இப்போது ஈரானின் அணுசக்தித் திறனை ஒரு மறுக்க முடியாத உண்மையாக ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப தனது தற்காப்பு மற்றும் பேச்சுவார்த்தை முறைகளை மாற்றத் தொடங்கியுள்ளது.
ஈரானின் இந்த ‘நிழல் அணு ஆயுதம்’, வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் ராணுவ மேலாதிக்கத்திற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) மூலம் ஈரானின் அணுசக்தித் தளங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கினாலும், ஈரானின் தொழில்நுட்ப அறிவை அழிக்க முடியவில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
இதன் காரணமாகவே, இஸ்லாமாபாத் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈரானிடம் இருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை முழுமையாகப் பறிமுதல் செய்வதை அமெரிக்கா தனது முதன்மை நிபந்தனையாக வைத்துள்ளது. ஆனால், “அணுசக்தித் திறன் எங்களது பாதுகாப்பின் அடிப்படை” என்று கூறி வரும் ஈரான், அதனை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.
தற்போது இன்று புதன்கிழமை (22) தற்காலிகப் போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில், ஈரானின் இந்த அணுசக்திப் பலம் பேச்சுவார்த்தை மேசையில் அவர்களுக்கு ஒரு வலுவான பிடியை வழங்கியுள்ளது.
அமெரிக்கா இனி ஈரானை அச்சுறுத்துவதை விட, அவர்களுடன் ஒரு புதிய வகை ‘அணுசக்தி சமநிலையை’ (Nuclear Balance) உருவாக்கவே முயற்சிக்கும் எனத் தெரிகிறது.
ஈரானின் இந்த அணு ஆயுத மர்மம் விலகாத வரை, மத்திய கிழக்கில் ஒரு நிலையான அமைதி என்பது எட்டாக்கனியாகவே இருக்கும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

