இலங்கை மத்திய வங்கி பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம், 11 ஆயிரத்து 145 மில்லியன் ரூபாயை, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் உறவினருக்கு சொந்தமான பேர்பச்சுவல் நிறுவனம் இலாபமாக பெற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நாட்டு மக்களை தெளிவூட்டும் வகையில் ஜனாதிபதி இன்று மாலை ஆற்றிய விசேட உரையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அரசாங்கத்திற்கு குறித்த காலப் பகுதியில் 8.5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் செயற்பாடுகள் தொடர்பில், மத்திய வங்கி உயர் அதிகாரிகள் கேள்வி எழுப்ப முடியாது செயலிழந்து காணப்பட்டதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அர்ஜுன் மகேந்திரன் மற்றும் சமரசிறி ஆகியோர் தொடர்பில் பிரதமர் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்ததாக குறிப்பிட்ட அவர், பிரதமர் அவ்வாறு நடந்திருக்ககூடாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அர்ஜுன் மகேந்திரனின் மருமகன் அலோசியஸ் குடும்பம் மற்றும் அவரது நிறுவனத்துக்காக, பென்ட ஹவுஸ் மாடி வீட்டுக்கு வாடகை செலுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து இலஞ்ச, ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர வேண்டும் எனவும், ஆணைக்குழு முன்னிலையில் பொய் சாட்சியம் அளித்தமைக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர வேண்டும் எனவும் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த நபர்களினால் ஊழியர் சேமலாப நிதியம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிதி முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி முறிகள் முறைகேடு தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுவோருக்கு எதிராக குற்றவியல் மற்றும் சிவில் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கியில் இனிவரும் காலங்களிலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாத வண்ணம் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, நாட்டில் நடைமுறையிலுள்ள பழைய சட்டங்களை இரத்து செய்து, புதிய நாணய சட்டத்தை அறிமுகப்படுத்தி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச கடன் திணைக்களத்தின் செயற்பாடுகள் கடும் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பான் ஆசிய வங்கியின் முன்னாள் தலைவர் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என அந்த ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகளுக்கான அனைத்து செலவீனங்களையும் பெர்பச்சுவல் நிறுவனத்திடமிருந்து அறவிட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள 11 ஆயிரத்து 145 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டத்தினை அரசாங்கத்திற்கு பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிசொகுசு தொடர்மாடி வீடொன்றை வாடகைக்கு பெற்றுக் கொண்டமைக்கு எதிராக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கையின் பிரதி சட்ட மாஅதிபரிடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதனூடாக இந்த சம்பவம் தொடர்பில் எதிர்கால நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஆணைக்குழு முன்னிலையில் போலி சாட்சியமளித்தமைக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது உறுதியளித்துள்ளார்.