பாடசாலை சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த28 வயது பெண்ணுக்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுர மேல் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
அனுராதபுரம் பேமமடுவ – அலிவங்குவ பகுதியைச் சேர்ந்த 28 வயதான, இராணுவ வீரர் ஒருவரின் மனைவிக்கே இந்த தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
2011மற்றும் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மஹவிலச்சிய பகுதியில் குறித்த பாடசாலை சிறுவனை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் சட்ட மா அதிபரினால் குறித்த பெண் மீது சுமத்தப்பட்டிருந்தன.
எனினும் பொலிஸாருக்கும் நீதிமன்றுக்கும் குறித்த பெண் வழங்கிய சாட்சியத்தில் குறித்த சிறுவனே தனிமையில் இருந்த தனக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இந் நிலையில், குறித்த பெண்ணுக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படுவதாக அறிவித்த நீதிமன்றம் அப்பெண்ணுக்கு தண்டனையை நேற்று அறிவித்தது.