மே 15, 1972. வேதா நிலையம். போயஸ் கார்டன்.
வாசலை அடைத்து பந்தல் போட்டு , யாகம் வளர்த்து , பசு மாடு சகிதம் உள்ளே வந்து பால் காய்ச்சி , படு ஆச்சாரமாக நடந்தது கிரஹப் பிரவேசம்.
நலம் விரும்பிகளில் நிறையப் பேர் புதுமனைப் புகுவிழாவுக்கு வரவில்லை. முக்கியமாக , எம்.ஜி.ஆர்.
பிற்பகலுக்குப் பின்னர் வீடே வெறிச்சென்று இருந்தது. தனிமையிலிருந்த ஜெயலலிதாவுக்கு அப்போது அம்மா ஞாபகம் வந்தது.
சந்தியா பக்கத்திலேயே இருந்து பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு. கட்டி முடிப்பதற்குள் அம்மாவின் வாழ்க்கை முடிந்திருந்தது.
ஒரே பெண்ணைக் கல்யாணக் கோலத்தில் பார்க்க வேண்டும் என்று எல்லா அம்மாக்களையும் போலத்தான் சந்தியாவும் ஆசைப்பட்டார்.
அது கடைசிவரை நிறைவேறவில்லை.
கிரஹப்பிரவேசத்துக்கு வாழ்த்த வந்தவர்களுக்கெல்லாம் பெரிய உறுத்தலாக இருந்தது அதுதான்.
ஜெயலலிதாவிடம் இருந்த அந்த பழைய சுறுசுறுப்பு , தெம்பு , உற்சாகம் எல்லாமே இப்போது இல்லை.
ஜிவ்வென்று ஏறுமுகத்திலிருந்த ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கையும் அப்போது சரிய ஆரம்பித்திருந்தது.
ஜெயலலிதாவுக்கு யாரிடமும் வாய்ப்பு கேட்டுப் பழக்கமில்லை.
வாய்ப்பு கிடைக்காமல் போனால் என்ன செய்வது என்றெல்லாம் ஜெயலலிதா யோசித்ததே கிடையாது.
இனிமேல் என்ன செய்யப் போகிறீர்கள் என்கிற கேள்விக்கு ஜெயலலிதா சொன்ன பதில். ‘ வெள்ளம் வருவதற்கு முன்பே ஆற்றை எப்படிக் கடப்பது என்றெல்லாம் நான் யோசிப்பதே கிடையாது!
உண்மைதான்.
நடிக்க வராவிட்டால் என்று நடிகைகளிடம் கேட்டால் டாக்டர், என்ஜினீயர் ஆகியிருப்பேன் என்று அடுக்குவார்கள்.
படிக்கும்போது ஜெயலலிதாவுக்கும் ஏகப்பட்ட கனவு இருந்தது.
ஆனால் , நடிக்க வந்த பின்னர் ஜெயலலிதாவிடம் யாராவது கேட்டால் முடிந்துபோன விஷயத்தைப் பற்றியெல்லாம் கேட்டு என்ன ஆகப் போகிறது என்று பதில் கேள்வி வரும்.
ஜெயலலிதாவுக்கு எப்போதும் , எதுவும் டேக் இட் ஈஸி பாலிஸிதான்.
‘ ஆயிரத்தில் ஒருவன் ’ காலத்திலிருந்தே ஜெயலலிதாவுக்கு சினிமாவில் போட்டி என்று சொல்லிக் கொள்ள யாருமில்லை.
ஆனால் , ஆறு வருஷத்துக்குப் பின்னர் சௌகார் ஜானகியை ஜெயலலிதாவுக்குப் போட்டியாளராக ஆக்கிவிட்டார்கள்.
ஜெயலலிதா வெறும் கிளாமர் நடிகைதான் என்று சீனியர் நடிகையான சௌகார் ஜானகி சொல்லிவிட, ஜெயலலிதாவுக்குப் பயங்கர கோபம்.
இரண்டு பேருமே பரஸ்பரம் தாக்கி பேட்டி கொடுத்தார்கள்.
பத்திரிகைகள் கர்மசிரத்தையாக அவற்றையெல்லாம் வெளியிட்டுப் புண்ணியம் தேடிக் கொண்டன.
‘ நீதி ’ படத்தில் யார் பெயரை டைட்டிலில் முதலில் போடுவது என்பதில் ஆரம்பித்த பிரச்னை அது.
இந்த நேரத்தில்தான் சரோஜா தேவி, கே.ஆர். விஜயா, ஜெயலலிதா, மஞ்சுளாவை வைத்து ‘சக்தி லீலை ’ என்கிற படமெடுத்தார் டைரக்டர் ராமண்ணா.
யார் பெயரை முதலில் போடுவது என்பதில் பெரிய தலைவலி.
ஒரு தாமரைப்பூவை காட்டி அதில் ஒவ்வொரு இதழிலும் ஒரு நடிகையின் பெயரை ஏழுதி ஒரே ஷாட்டில் காட்டி சமாளித்துவிட்டார்கள்.
1972. ஒய்.ஜி.பி.க்குப் பாராட்டு விழா.
எம்.ஜி.ஆர்தான் தலைமை. சந்திரபாபு உட்பட ஒய்.ஜி.பி.யின் சிஷ்யர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். விழாவுக்கு வந்தவர்களெல்லாம் ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டு விக்கித்துப் போனார்கள்.
‘Behind every successful man there is always a woman telling him that he is not so great and urging him on to greater efforts’ .
எம்.ஜி.ஆர். ஜெயலலிதா மோதல் முற்றிவிட்டதாகச் செய்தி அடிபட்டுக் கொண்டிருந்த நேரத்தில்தான், பாரத்பட்டம் பெற்ற எம்.ஜி.ஆருக்குப் பாராட்டு விழா நடந்தது.
எல்லோரும் எம்.ஜி.ஆரை போற்றிப் புகழ்ந்தார்கள். அப்போது மேடையேறிய ஜெயலலிதா, ‘எம்.ஜி.ஆருக்கு பாரத் பட்டம் கிடைக்காவிட்டால்தான் ஆச்சர்யப்பட வேண்டும் ’ என்றார்.
‘எம்.ஜி.ஆருக்கு பாரத் விருந்து வாங்கிய போது நடந்த பாராட்டு விழாவில்..
ஜெயலலிதாவின் பேச்சுதான் எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
‘ சித்ரா பௌர்ணமி ’ படத்துக்காக காஷ்மீர் வந்த ஜெயலலிதாவும் ‘ இதய வீணை ’ படத்துக்காக அங்கே வந்த எம்.ஜி.ஆரும் ராணுவ முகாம்களில் வீரர்களுக்கு மத்தியில் பேசிக் கொண்டிருந்த அதேநேரத்தில், தமிழ்நாட்டு அரசியலில் திடீர் திருப்பங்கள்.
ஆளுங்கட்சியான தி.மு.க.வில் ஏகப்பட்ட செல்வாக்கோடு இருந்த எம்.ஜி.ஆர். ஓரங்கட்டப்பட்டார்.
1972 அக்டோபர். எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பமானது.
காமராஜரில் ஆரம்பித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் வரை யாரும் எம்.ஜி.ஆர். தனிக்கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.
இரண்டே வாரத்தில் 600 கட்சிக் கிளைகள். பத்து லட்சம் பேர் உறுப்பினர்கள்.
ஆளுங்கட்சிக்கு எதிரான ஊழல் பட்டியலை கையில் ஏந்தி அண்ணா சாலையில் எம்.ஜி.ஆர். ஊர்வலம் போனபோது வந்த கூட்டத்தைப் பார்த்து ராஜாஜி ஆச்சர்யப்பட்டுப் போனார்.
டெல்லி மேலிடத்தின் உறுதியான ஆதரவு எம்.ஜி.ஆருக்கு.
இருபது ஆண்டுகளாக தி.மு.க. Vs காங்கிரஸ் என்றிருந்த தமிழ்நாட்டு அரசியல், ஒரே மாதத்தில் தி.மு.க. Vs அ.தி.மு.க. என்றாகிப் போனது.
அதுவரை புரட்சி நடிகராக இருந்த எம்.ஜி.ஆர்., இப்போது புரட்சித் தலைவர்!
ஜெயலலிதாவும் மீண்டும் சினிமாவில் பிஸியானார். சிவாஜியுடன் ஜெயலலிதா நடித்த ‘ அவன்தான் மனிதன் ’ சூப்பர் ஹிட் ஆனது. ‘
சூரியகாந்தி ’ படத்தின் வெற்றி விழாவுக்கு பெரியார் வந்திருந்தார்.
மேக்கப் இல்லாமல் ஜெயலலிதா நடித்திருந்த ‘ திருமாங்கல்யம் ’, அவரது நூறாவது படமாக வந்தது.
ஜெயலலிதா இப்போது கலைச்செல்வி!
தொடரும்..
-ஜெ.ராம்கி-