அ.தி.மு.கவின் அடுத்த பொதுச் செயலாளர் சசிகலா என அக்கட்சி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனால் அடுத்தகட்ட ஆலோசனை நடத்த தீபா வீட்டிற்கு சென்ற அவரது ஆதரவாளர்கள் 7 மணி நேரம் அவரைத் தேடினார்கள். பின்னர் அவர் வீட்டிலேயே முகாமிட்டனர்.
அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலாதான் அடுத்த பொதுச் செயலாளர் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது.
அதற்கு சசிகலாவும் சம்மதம் தெரிவித்து விட்டார். தொடர்ந்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிக்கு சென்று இன்று மாலை கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் சசிகலா.
சசிகலாவின் தலைமையை ஏற்றுக் கொள்ள விரும்பாத அ.தி.மு.கவினர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்து வருகின்றனர்.
அவருக்கு ஆதரவாக பேனர்களும் பல மாவட்டங்களில் வைக்கப்பட்டன. தீபாவை அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக்க வேண்டும் என்று கட்சியில் சிலர் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் தற்போது சசிகலா, பொதுச் செயலாளராகி விட்டதால் தீபாவின் ஆதரவாளர்கள் அடுத்து என்ன செய்வது என்று ஆலோசிக்க இன்று காலை தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இருப்பினும் அங்கேயே ஆதரவாளர்கள் 7 மணி நேரம் முகாமிட்டனர்.
இதுகுறித்து பூந்தமல்லி நகரச் செயலாளர் தேவேந்திரன், முன்னாள் கவுன்சிலர் மாறன் ஆகியோர், ’’பூந்தமல்லி நகராட்சிப் பகுதியிலிருந்து இன்று காலை 9 மணியளவில் தி.நகரில் உள்ள தீபா வீட்டிற்கு சென்றோம்.
அங்கு அவர் இல்லை. இதனால் தீபாவின் கணவர் மாதவனிடம் போனில் பேசினோம். அப்போது அவர், தீபாவிற்கு உடல் நலம் சரியில்லை.
அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார். அது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம் என்று சொன்னார்.
இதனால் நாங்கள் கிளம்பி வந்து விட்டோம்” என்றனர்.
இதையடுத்து மாலை 4 மணியளவில் வீட்டிலிருந்து தீபா வெளியே வந்தார். அங்கு கூடியிருந்தவர்களிடம் சைகை மூலம் ’அமைதியாக இருங்கள்’ என்று கூறினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் ‘அம்மா…. அரசியலுக்கு வாருங்கள், நாங்கள் உங்களை நம்பி வந்து விட்டோம்.
எங்களை வழி நடத்துங்கள். உங்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்போம்’ என்று கோஷமிட்டனர்.
தீபாவின் அருகில் செல்ல சிலர் முயன்றனர். அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சிறிது நேரத்துக்குப் பிறகு தீபா, மீண்டும் வீட்டுக்குள் சென்று விட்டார்.
மன்னார்குடி தரப்பினரால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று தீபா தரப்பு கருதுகிறது.
இதனால்தான் அவர், அமைதியாக இருக்கிறார் என்று சொல்கின்றனர் தீபா தரப்பினர். அதற்கு தீபாவின் ஆதரவாளர்கள், ‘தீபா அம்மாவிற்கு நாங்கள் முழு பாதுகாப்பு கொடுக்கிறோம். அம்மாவின் வாரிசான தீபா அம்மா அரசியலுக்கு கண்டிப்பாக வர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.
– நமது நிருபர்