அதிகாரத்துக்கும் சொத்துக்கும் கணக்குக்கேட்டு நடந்துவரும் தி.மு.க. குடும்பச் சண்டையில் யார் உயிர் மதுரையில் போகப்போகிறதோ? என்று தி.மு.க. வினர் பீதியில் இருக்கின்றனர்!
தி.மு.க.வில் ஒருகாலத்தில் தென்மாவட்டங்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்த அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின் ஊர் ஊராகச் சென்று தனது படை பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் ஊர் ஊராகத் திரிந்தாலும் அழகிரியுடன் இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய ஆதரவாளர்களே வலம் வருகின்றனர்.
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக அழகிரி தான் செல்லும் இடங்களில் தனக்கும் கூட்டம் இருக்கிறது என்பதுபோல ஆதரவு திரட்டி வருவதுதான் நிஜம்.
யாரெல்லாம் அஞ்சா நெஞ்சனின் தளபதிகள் எனக் கூறிக்கொண்டு அரசியல் செய்து கோடி கோடியாகப் பணம் சம்பாதித்தார்களோ அவர்கள் இப்போது ஸ்டாலின் அணியில் பத்திரமாக ஐக்கியமாகிவிட்டனர்.
இதில் தேர்தலுக்கு முன்பே ஸ்டாலின் அணிக்கு டிரான்ஸ்பர் ஆனவர் தான் எஸ்ஸார் கோபி. அழகிரியின் ஒட்டுமொத்த பலமே நான் தான் எனக்கூறி வந்த கோபி திடீரென ஸ்டாலின் அணியில் சேர்ந்தபோது வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக அழகிரி மனம் வருந்தினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரெண்டு முடி போனதற்கெல்லாம் கவலைப்பட முடியுமா? என்றார்.
அழகிரியின் கோட்டையாகக் கருதப்பட்ட மதுரையை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்தாலும் அடியோடு சாய்க்க நினைத்த ஸ்டாலினுக்கு இன்னும் முழு வெற்றி கிடைக்கவில்லை. தமிழகத்தில் எங்கு தி.மு.க. தோற்றாலும் கவலையில்லை.
ஆனால், மதுரையில் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்பதுதான் ஸ்டாலினுடைய குறிக்கோள். காரணம் அழகிரியை அவரது கோட்டையிலேயே வீழ்த்திய பெருமை தனக்குக் கிடைக்கும் அதன் மூலமாக அழகிரியை அட்ரஸ் இல்லாமல் செய்துவிடலாம் என்பதும் ஸ்டாலினின் வியூகம்.
இத்தனை நாட்களாக மதுரையில் நடக்கும் விநோதங்களை கைகட்டி வேடிக்கை பார்த்த ஸ்டாலின் ஆதரவாளர்கள், தி.மு.க. கரைவேட்டி கட்டிக்கொண்டு தி.மு.க. விற்கு எதிராக வாக்குச்சாவடி மையங்களில் களமிறங்கி தே.மு.தி.க.வுக்கு அழகிரி ஆதரவாளர்கள் ஓட்டுக் கேட்டதைத்தான் பொறுத்துக்கொள்ள முடியில்லை. எப்படி கலகம் விளைவிக்கலாம் என்று காத்துக்கொண்டிருந்தார்கள்.
முன்பெல்லாம் அழகிரி மற்றும் ஸ்டாலின் அணியினர் எதிரெதிரே பார்த்துக்கொண்டாலும் ஒரே கட்சி என்ற அடிப்படையில் மரியாதை நிமித்தமாக ஒதுங்கிச் சென்ற காலம் மாறி இப்போது அண்ணன், தம்பி இடையிலான மோதல் நேருக்கு நேர் மல்லுக்கட்டும் அளவிற்கு பகிரங்கமாக வெடித்து இருப்பது தி.மு.க. புள்ளிகளின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து இருக்கிறது.
இதன் உச்சக்கட்டமாக ஏப்ரல் 24 ஆம் திகதி தே.மு.தி.க.விற்கு ஆதரவாக தி.மு.க. கரைவேட்டியுடன் சென்று வாக்குச்சாவடி அருகே நின்று கொண்டு தி.மு.க. வுக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று பொதுமக்களிடம் சொன்ன அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் 4பேரை ஸ்டாலின் ஆதரவாளர்கள் நையப்புடைத்தது மதுரை அரசியலில் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.
தனது ஆதரவாளர்களைப் பொடிப்பையன்களை வைத்து அடித்துவிட்டார்களே எனக் கேள்விப்பட்ட அழகிரி, நான் அமைதியாக இருக்கிறேன் என நினைத்துவிட்டார்களா? எனக் கொதித்துப்போய் உடனே தன்னுடைய ஆதரவாளர்களை அழைத்து அவசரக்கூட்டம் போட்டிருக்கிறார்.
எங்கே நாம் இந்தத் தேர்தலில் ஜெயித்து விடுவோமோ? என்ற பயத்தில்தான் அவர்கள் கைநீட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் கைநீட்டினால் நீங்களும் பதிலுக்கு திருப்பி அடிக்க வேண்டியதுதானே எனக் கொம்புசீவி விட்டுள்ளாராம் அழகிரி.
இந்த இரு அணிகளில் எந்த அணி மதுரையில் ஜெயித்தாலும் உள்கட்சி மோதல் வெடிப்பது உறுதி என்கிறார்கள். இந்த மோதலில் யார் உயிரை யார் எடுக்கப்போகிறார்களோ என்ற அச்சத்தில் மதுரை தி.மு.க.வினர் உறைந்து போயிருக்கிறார்கள்.
மதுரை அடிதடி தொடர்பாக அழகிரி ஆதரவாளர்களான முன்னாள் அவைத்தலைவர் இசக்கிமுத்து, முன்னாள் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் உதயகுமார், சிவக்குமார், முன்னாள் பொருளாளர் மிசா. பாண்டியன், முன்னாள் மண்டலத் தலைவர் கோபிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்சா, முன்னாள் பகுதிச் செயலாளர்கள் முருகன், ராமலிங்கம், ஆர்.எம். கருப்பசாமி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சுப்புலட்சுமி ஆகிய பத்துப் பேரையும் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்க கட்சித் தலைமை உத்தவிட்டுள்ளது.
லேட்டஸ்ட்டாக நீக்கப்பட்ட அழகிரி ஆதரவாளர்களோ, ஏற்கெனவே மாநகர் தி.மு.க. வை கூண்டோடு கலைத்து மாட்டுக்கு பல்லைப் பிடுங்கிட்டாங்க. இப்ப மீண்டும் டிஸ்மிஸ் பண்ண எத்தனை முறை தான் பிடுங்கிய மாட்டுக்கே பல்லைப் பிடுங்கிக்கிட்டு இருக்கப் போறாங்க. இது ரொம்ப லேட்டு.
அண்ணன் அழகிரி கூறியது நடந்துவிடும் என்கிற தோல்விப் பயம் தான் இந்த நீக்கத்திற்கு அடிப்படைக் காரணம் என்றனர் ஆவேசமாக.
மதுரையல் மீண்டும் பத்துப் பேர் நீக்கம் என்று டி.வி.யில் செய்தி பிளாஷ் ஆனதும் அன்று மாலையே மதுரைக்கு கோபம் கொப்பளிக்கத் திரும்பிவிட்டார் அழகிரி. தேர்தல் முடிவு வரும்வரை அமைதியாக இருங்கள் என்று அழகிரியை அவரது ஆதரவாளர்கள் சமாதானப்படுத்தி வருவதாகத் தகவல்!