வடமாகாணத்தின் 5வது ஆளுநராக பதவியேற்றுக் கொண்ட ரெஜினோல்ட் குரே இன்று வெள்ளக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
யாழ். கச்சேரி வீதியில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.28 மணியளவில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த கடமைப் பொறுப்பேற்றல் நிகழ்வில், தனது பாரியாருடன் வருகை தந்திருந்த அவரை, வடமாகாண சபை உறுப்பினர்கள் வரவேற்றனர்.
தமிழர் சம்பிரதாய முறைப்படி வரவேற்கப்பட்ட அவர், அலுவலக வாசலில் பால் காய்ச்சியதுடன், தமிழ் மற்றும் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தேசிய கீதத்தினை தொடர்ந்து, மங்கள விளக்கேற்றல் வைபவம் இடம்பெற்றது.
அதில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
அதன்பின்னர் இந்து, பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவ மத தலைவர்களின் ஆசியுடன், சுமார் 10.28 மணியளவில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய ஆளுநருக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மாலை அணிவித்ததுடன், பொன்னாடை போர்த்தி கௌரவித்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.