‘எனக்கும், என் மனைவிக்கும் யாரிடமும் கை கட்டி வேலை செய்ய பிடிக்காது. அதனால், ஆபாச பேச்சு வாயிலாக கோடிகளை குவித்தோம்’ என, ‘பெப்ஜி’ மதன் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பொலிஸில் மதன் அளித்துள்ள வாக்குமூலத்தில்,
சென்னை அம்பத்தூரில் ஹோட்டல் துவங்கினேன்; படுத்துவிட்டது; தொடர்ந்து நடத்த முடியவில்லை. இதனால், என் மனைவி தான், யுடியூப் சனல் ஆரம்பிக்கலாமென கூறினார்.
அதிலும் தனித்து தெரிய வேண்டும் என முடிவு செய்தேன். ‘பெப்ஜி’ என்ற ஒன்லைன் விளையாட்டிற்கு சிறுவர்கள், இளைஞர்கள், பெண்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்தேன்.
அதற்காக, அதிநவீன தொழில் நுட்ப வசதியை பயன்படுத்தி, ‘பெப்ஜி’ விளையாட்டிற்கு ஆபாசமாக பின்னணி குரல் கொடுத்து, யுடியூப் சனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்தோம்.
பெண்களை கவர, என் மனைவியும் ஆபாசமாக பேசினார்.எங்களுக்கு பின்னால், எட்டு இலட்சம் பேர் திரண்டனர்.
இவர்களை எங்களின் ஆபாச பேச்சுக்கு அடிமைப்படுத்தினோம். இதன் வாயிலாக கோடிகளை குவித்தோம். இரண்டு ‘ஆடி’ கார்கள், சொகுசு பங்களாக்கள் வாங்கினோம். எங்கள் வயதை மீறி வருமானத்தை குவித்தோம்.
குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாக வேண்டும் என்ற இலக்குடன், தினமும் 18 மணி நேரம் யுடியூப் சனல்களுக்காக உழைத்தோம். சில பெண்களிடம் இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து, எங்களை பற்றி புகழ்ந்து பேசி, ‘வீடியோ’ வெளியிட வைத்தோம்.ஏழைகளுக்கு உதவி செய்வது போல நடித்து, சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என, பலரிடம், பல இலட்சம் ரூபாய் வரை குவித்தோம்.
பணம் தான் எங்களின் பிரதான நோக்கம். அதற்காக நாங்கள் கையில் எடுத்த ஆயுதம் தான் ஆபாச பேச்சு.இவ்வாறு, மதன் வாக்குமூலம் அளித்துள்ளார்.