முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி – கரிக்கட்டைப் பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் மதுரங்குளி கரிக்கட்டைப் பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் முந்தல் பொலிஸார், மதுரங்குளி கரிக்கட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மதுரங்குளி கரிக்கட்டைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் நீண்ட காலமாக நபர் ஒருவருடன் தவறான தொடர்பை பேணி வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (18) அறையொன்றில் இருந்துகொண்டு தனது கள்ளக் காதலனுக்கு இரவு நேரச் சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்த போது அங்கு வருகை தந்த குறித்த பெண்ணின் மகன் இதனைப் பார்த்ததுடன் கடுமையாகவும் கண்டித்துள்ளதுடன், தாயின் கள்ளக் காதலனை வீட்டை விட்டு வெளியே போகுமாறும் கூறியுள்ளார்.
இதையடுத்து தாயின் கள்ளக் காதலனுக்கும், இளம் குடும்பஸ்தரான மகனுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
அந்த வாய்த்தர்க்கம் முற்றியதால் ஆத்திரமடைந்த தாயின் கள்ளக் காதலன் அருகிலிருந்த கூரிய ஆயுதம் ஒன்றை எடுத்து குறித்த இளம் குடும்பஸ்தரான கள்ளக் காதலியின் மகனை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி, உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளி கரிக்கட்டைப் பகுதியைச் சேர்ந்த குறித்த இளம் குடும்பஸ்தர் கேகாலை – அலவ பிரதேசத்தில் திருமணம் முடித்துள்ளார்.
இந்த நிலையில் சுகயீனமடைந்துள்ள தனது தாயை பார்ப்பதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மதுரங்குளியிலுள்ள தனது தாயின் வீட்டுக்கு வருகை தந்துள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.