ஆன்லைனில் அறிமுகமான நபரை நம்பி புனே பெண் ஒருவர் ரூ.33 லட்சத்தை இழந்திருக்கிறார்.
ஆன்லைனில் பெண்களிடம் பழகும் மோசடி பேர்வழிகள் அடிக்கடி பணத்தை அபகரித்துவிட்டுத் தலைமறைவாகிவிடுகின்றனர்.
அது போன்ற ஒரு மோசடி புனேயில் நடந்திருக்கிறது. புனேயைச் சேர்ந்த 38 வயதான பெண்ணுக்கு சமூக வலைதளத்தில் தன்னை பிரிட்டன் தொழிலதிபராகக் காட்டிக்கொண்ட நபர் ஒருவர் நட்பு கோரிக்கை அனுப்பியிருக்கிறார்.
அந்தப்பெண்ணும் அக்கோரிக்கையை ஏற்று இருக்கிறார். பின்னர், அவர்கள் இருவரும் சில நாள்களில் ஆன்லைனில் சாட்டிங் செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.
இந்த நிலையில், அந்த பெண்ணுடன் நன்றாகப் பழகிய பின்னர், அந்த நபர் தான் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். புனே பெண்ணும் அவரை இந்தியாவுக்கு வரும்படி அழைத்திருக்கிறார்.
அப்போது, இந்தியாவுக்கு வரும் வழியில் டெல்லி விமான நிலையத்தில் தன்னை சுங்க வரித்துறை அதிகாரிகள் பிடித்துக்கொண்டதாகவும், அதிக அளவில் வெளிநாட்டு கரன்சி எடுத்து வந்திருப்பதாகவும் அந்த பெண்ணுக்கு போன் செய்து தகவல் தெரிவித்திருக்கிறார்.
பின்னர், சிறிது நேரத்தில் சுங்க வரித்துறை அதிகாரி என்று கூறிக்கொண்டு பெண் ஒருவர் புனே பெண்ணிற்கு போன் செய்திருக்கிறார்.
பிரிட்டன் நண்பரை விடுவிக்க வேண்டுமானால் அவர் கொண்டு வந்திருக்கும் வெளிநாட்டுப் பணத்துக்கு வரிக்கட்ட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அதனால், அந்தப்பெண் கேட்ட ரூ.33 லட்சத்தை புனே பெண் தனது வங்கிக் கணக்கிலிருந்து அனுப்பியிருக்கிறார்.
புனே பெண் பணம் அனுப்பிய பிறகு, சுங்க வரித்துறை அதிகாரி என்று பேசிய பெண்ணும், பிரிட்டன் நபரும் தங்கள் செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்திருக்கின்றனர்.
அதனால், சந்தேகமடைந்த புனே பெண் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து புனே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “புனே பெண் முதலில் தன் வெளிநாட்டு நண்பர் உதவி கேட்ட போது உதவி செய்யவில்லை.
ஆனால் சுங்க வரித்துறை அதிகாரி என்று கூறி பெண் ஒருவர் போன் செய்து பேசிய பிறகு புனே பெண் பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார்.
முன்பின் தெரியாதவர்களிடமிருந்து வரும் நட்பு கோரிக்கையை மிகவும் கவனமாக ஆய்வு செய்து ஏற்கவேண்டும். அதேபோல, முன்பின் தெரியாத நபர்களுக்குப் பணத்தை அனுப்புவதை அனைவரும் தவிர்க்கவேண்டும்” என்றார்.