சுமார் 145 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணி, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் நடைபெற்று வருகின்றது.
இச்சிலையானது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விட 5 அடி உயரம் கொண்டது எனவும், இச் சிலை திறக்கப்பட்டால், இதுவே உலகின் மிக உயரமான முருகன் சிலையாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
மேலும் இச்சிலையின் கட்டுமானப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.
இது குறித்து கோயில் நிர்வாகி ஸ்ரீதர் கூறுகையில், “எனது தந்தை முத்துநடராஜன் கடந்த 2016 ஆம் ஆண்டு முருகன் சிலை அமைப்பதற்கான ஏற்பாட்டைஆரம்பித்து வைத்தார். இச்சிலை வடிவமைப்பு பணி, மலேசியா பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த தமிழகத்தைச் சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி தலைமையில் நடைபெற்றது” என்றார்.
அத்துடன் வரும் ஏப்ரல் 6ஆம் திகதி இதன் கும்பாபிஷேகம் நடைபெறும் எனவும், கும்பாபிஷேகத்தில் தமிழகத்தில் உள்ள மடாதிபதிகள், உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.