என்னை கொலை செய்வதற்கான முயற்சி குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது. பொலிஸ்மா அதிபருடன் இந்த விட யம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளேன். விசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டு இதற்கான விசாரணை தொடர்கின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகையில் ஊடக நிறுவனங்க ளின் பிரதானிகள் மற்றும் பத்திரிகையின் ஆசிரியர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன் னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவையும் கொலை செய்வதற்கான சதித்திட்டம்
தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப்பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாக ஊழலுக்கு எதிரான படை அமைப்பின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார என்பவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருநு்தார். இந்த விடயம் தொடர்பில் விடே விசாரணை இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த விடயம் தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாக தெரிவித்திருக்கின்றார்.
கேள்வி: ஜனாதிபதியான உங்களை கொலை செய்வதற்கு முயற்சி எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பிரதிபொலிஸ்மா அதிபர் ஒருவருக்கு எதிராகவே இவ்வாறு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
பதில்: இவ்விடயம் தொடர்பில் தகவல் கிடைத்தது. விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில் இங்கு வருவதற்கு முன்னரும் பொலிஸ்மா அதிபருடன் தொடர்புகொண்டு வினவியிருந்தேன். விசேட குழுவின் கீழ் விசாரணை இடம்பெற்று வருகின்றது.
கேள்வி: பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிராக செய்யப்பட்ட குற்றச்சாட்டை பொலிஸ் குழுவே விசாரிக்கவுள்ளது. குற்றச்சாட்டப்பட்டவர் பிரதி பொலிஸ் மா அதிபராக இருப்பதனால் விசாரணைக்கு இடையூறுகளை ஏற்படுத்த முடியும். எனவே அவரை பதவிலியிருந்து இடைநிறுத்தி விசாரணைகளை மேற்கொள்ள முடியாதா?
பதில்: இந்த சம்பவம் தொடர்பில் வெளியிடப்பட்ட ஒலிநாடாவில் நானும் கோத்தபாய ராஜபக்ஷவும் போதைப் பொருளுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரி தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டதன் அடிப்படையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஊடாக விசாரணையை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
கேள்வி: இந்த குற்றச்சாட்டுடன் பொலிஸ் மா அதிபரும் தொடர்புபட்டுள்ளாரா?
பதில்: குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடைபெறுகின்றது.
கேள்வி: நாட்டின் ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிடப்பட்டிருக்கின்றது. வடக்கில் சிங்கள குடியேற்றம் இடம்பெறுவதாக குற்றம்சாட்டப்படுகின்றது. போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இவ்வாறு குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன. திட்டமிட்ட வகையில் நாட்டின் உறுதிப்பாட்டை இல்லாமல் ஆக்குவதற்கு சதிமுயற்சி நடக்கின்றதா?
பதில்: உண்மையில் பொலிஸ் அறிக்கைகளை பார்க்கும் போது கடந்த மூன்று நான்கு வருங்களில் நாட்டில் குற்றங்கள் குறைவடைந்துள்ளன. இந்த நிலையில் நாம் பொறுப்புடன் செயற்படவேண்டும். பதவிகளை வகிப்பவர்கள் பொறுப்புடன்செயலாற்றவேண்டும்.