ஜனாதிபதி மைத்திரிபால , முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ஆகியோருக்கு எதிரான கொலை சதி முயற்சி தொடர்பில் வெளிப்படுத்தப் பட்ட தகவல்களை மையப்படுத்தி சி.ஐ.டி. முன்னெடுக்கும் விசாரணைகளில் கைது செய்யப்பட்ட இந்தியர் எந்த கொலை சதி முயற்சிகளையும் வெளிப்படுத்தவில்லை என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
எனினும் அவர் விசாரணைகளின் போது, ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்த்தபோது, குறிப்பிட்ட சில நபர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தனக்கு தோன்றியதாகவும், அது தொடர்பில் தகவல்களைப் பெற முயற்சிகளை முன்னெடுத்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.
நேற்றுமாலை வாத்துவ பொலிஸ் நிலையத்தில் இந்த விடயம் தொடர்பில் விளக்கமளிக்கும் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது பொலிச் பேச்சாளர் மேலும் தெரிவித்ததாவது,
அந்த இந்தியர் மேர்சிஸ் தோமஸ். அவரை சி.ஐ.டி. கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதியே கைது செய்தது. சில சதி குறித்த தகவல்களை வெளிபப்டுத்திய நாமல் குமார என்பவரது வீட்டிற்கு அவரை சந்திக்க வந்து சென்ற போது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், நாமல் குமார கொடுத்த தகவல்களை மையபப்டுத்தியே அந்த இந்தியர் கைது செய்யப்பட்டார்.
இந்த இந்தியர் 2017 ஜனவரி மாதம் இலங்கைக்கு வந்துள்ளார். அவர் இங்கு பல இடங்களில் தங்கியிருந்துள்ளார். அவ்வாறு எனில் அப்போது முதல் இதுவரை அவர் இங்கு தங்கியிருக்க அவருக்கு எங்கிருந்து நிதி கிடைத்தது. யார் அவருக்கு நிதி உதவியளித்தார் உள்ளிட்ட விடயங்கள் குறித்து தற்போது பிரதான விசாரணை நடக்கின்றது.
எனினும் இந்த இந்தியர் எந்த கொலை சதி குறித்தும் தகவல்களை வெளிபப்டுத்தவில்லை. மாற்ற்றமாக அவர் வழங்கியுள்ள வாக்கு மூலத்தில், ‘ நாமல் குமார கண்டியில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிபப்டுத்திய தகவல்கள், தொலைபேசி குரல் பதிவுகளுக்கு அமைய ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்த்த போது, குறிப்பிட்ட சில நபர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தனக்கு தோன்றியதாகவும், அது தொடர்பில் தகவல்களைப் பெறவே நாமல் குமாரவை சந்திக்கச் சென்றதாகவும் கூறியுள்ளார்.
இதனை தவிர அவர் எந்த கொலை சதி குறித்தும் தகவல்களை வெளிபப்டுத்தவில்லை. தான் உணர்ந்த விடயத்தையே அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். இதனையே நாம் நேற்று முன் தினம் கோட்டை நீதிவானுக்கு அறிவித்தோம். எந்த கொலை சதியும் வெளிப்படுத்தப்படவில்லை.
இந் நிலையில் இந்த இந்தியர் தொடர்பில் பல்வேறு கோணங்களில் சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். என்றார்.