முல்லைத்தீவில் சட்ட விரோத மீன்பிடி தொழிலை உடனடியாக நிறுத்துமாறு கோரி ஆயிர்க்க்கணக்கான மீனவர்கள் மக்கள் என பலர் திரண்டு இன்று (02) காலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம் முன்பாக ஆரம்பமான பேரணி, முல்லைத்தீவு பொதுசந்தை வழியாக நகரை சென்றடைந்து, அங்கிருந்து மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினை சென்றடைந்தது.
அங்கே சென்ற மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடியை தடைசெய்யுமாறு கோரி கோஷங்களை எழுப்பியதுடன் நீரியல் வள திணைக்கள உதவிப் பணிப்பாளர் தம்மை சந்திக்க வேண்டும் என நீண்ட நேரமாக காத்திருந்தனர்.
மிக நீண்ட நேரம் காத்திருந்த மக்களை எவரும் சந்திக்காத நிலையில் ஆத்திரம் அடைந்த மக்கள் பொலிஸாரின் தடையையும் மீறி வேலிகளை உடைத்து திணைக்களத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன் காரணமாக பல ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியதோடு, சுற்றுவேலியும் முற்றாக தகர்க்க பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அதிகளவான கலகம் அடக்கும் பொலிஸார் திணைக்களத்தை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
போராட்டத்தில் கலந்துகொண்ட பாராழுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்தும் போராடும் மக்கள் நீரியல்வள திணைக்களம் முன்பாக தற்போது பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.