புங்குடுதீவு மாணவி சி.வித்தியா கொலை சம்பவம் தொர்பான முக்கிய சாட்சியம் ஒன்று தம்பிடம் கிடைத்துள்ளது என்று குற்றப் புலனாய்வு பிரிவினர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளனர்.
குறித்த வழக்கு இன்று புதன்கிழமை மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரி நிசாந்த சில்வா மன்றில் தோண்றியிருந்தார்.
மன்றில் தோன்றிய அவர்:- வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பாக நாம் மேற்கொண்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் புதிதாக ஒரு முக்கிய சாட்சியை கண்டறிந்துள்ளோம்.
அச் சாட்சியத்திடம் இருந்து வித்தியாவின் கொலை தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுள்ளோம். பெற்றுக் கொண்டுள்ள தகவல்களின் அடிப்படையில் துரிதமான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.
நாம் மேற்கொண்டு வரும் விசாரணைகள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தி, அவர்களின் ஆலோசனை பெறப்பட்ட பின்பே எமது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இக் கொலைச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணகைள் முடிந்த பின்னரே நீதிமன்றத்தில் அது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அவ்வதிகாரி மன்றில் தெரிவித்திருந்தார்.
அத்துடன் குறித்த வழக்கு தொடர்பில் அறிந்தவர்கள் தாமாக முன் வந்து சாட்சியம் அளித்தால் வழக்கு விசாரணைகளை துரிதகதியில் மேற்கொள்ள முடியும். எனவும் தெரிவித்தனர்.
அதேவேளை மாணவி படுகொலை செய்யப்பட்ட தினத்தை அண்டிய கால பகுதியில் மாணவி வசித்த கிராம சேவையாளர் பிரிவில் குடியிருந்த குடும்பங்களின் விபரம், சம்பவத்தின் பின்னர் குடும்பங்கள் எவையேனும் வெளியேறி இருந்தால் அவற்றின் விபரம், சம்பவம் நடைபெற்ற காலத்தை அண்டிய கால பகுதியில் வெளியில் இருந்து வந்து எவரேனும் குறித்த பகுதியில் வசித்திருந்தால் அவற்றின் விபரம் ஆகியனவற்றை அடுத்த தவணை மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என கிராம சேவையாளருக்கு நீதிவான் பணித்துள்ளார்.
அதனை தொடர்ந்து வழக்கு விசாரணை எதிர்வரும் 13ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதுவரையில் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.