வடமாகாணசபையின் தீர்மானங்கள் மற்றும் கருத்துக்களை திரிபுபடுத்தி வெளியிடுவதன் ஊடாக சுமணரத்ன தேரர் போன்ற இனவாதிகளை பாதுகாப்பதற்கு தென்னிலங்கை ஊடகங்கள் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வடமாகாண சபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். வடமாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான விவாதம் இன்று இடம்பெற்றது.
இதன் போது கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வடக்கில் மக்களின் காணிகளில் அடாத்தாக விகாரைகள் அமைக்கப்படுவதையும், சுமணரத்ன தேரர் போன்றவர்களின் செயற்பாடுகள் ஐக்கியத்திற்கு குந்தகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றியிருந்தோம்.
எனினும், அதனை தெற்கு ஊடகங்கள் திரிபுபடுத்தி வெளியிட்டிருந்தது. அதேபோல் வடமாகாணசபைக்கான கீதம் ஒன்றை உருவாக்குவதற்கும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தோம். அதனை வடமாகாணசபை தேசிய கீதம் இயற்றபோவதாக திரிபுபடுத்தி செய்தியாக்கியிருந்தார்கள்.
இவ்வாறான செயற்பாடுகளை தங்கள் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தவும், சுமணரத்ன தேரர் போன்ற இனவாதிகளை பாதுகாப்பதற்குமே முயற்சிக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மாகாணசபைக்கான கீதம் உருவாக்கம் தொடர்பாக பொறுப்புவாய்ந்தவர்களுடன் பேசியிருந்தேன். அப்போது நான் கூறியிருக்கிறேன் அதாவது, தேசிய கீதம் உருவாக்குவதற்கு இங்குள்ளவர்கள் பைத்தியகாரர்களாக இருக்கவேண்டும். ஆனால் நாங்கள் பைத்தியகாரர்கள் இல்லை என்றார்.