அ.தி.மு.க என்ற மாபெரும் கட்சிக்குள், சீனியர்களையும் ஜெயலலிதாவையும் மோதவிட்டு எம்.ஜி.ஆர் ரசித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் இதே ஆயுதத்தை ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கையில் எடுத்தார். ஜானகி, ஜெயலலிதாவுக்கு எதிராக கையில் எடுத்தார்.
சசிகலாவும் நடராஜனும் இன்னும் நூதனமாக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஜானகி ஆகிய மூவருக்கும் எதிராக அவ்வப்போது எறிந்தனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், எல்லோரின் ஆயுதங்களும், அதனதன் இலக்கைச் சரியாக வீழ்த்தி வெற்றியைக் கொடுத்தன. எம்.ஜி.ஆருக்கு வேதனையைக் கொடுத்தன.
ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை நோக்கி எறிந்த ஆயுதம்!?
ஜெயலலிதா ஒருமுறை அமெரிக்கா கிளம்பினார். அரிதாக அவர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களில் அதுவும் ஒன்று. போகும்போது,
வருமானவரி நடைமுறைகளைச் சமாளிக்க, “நான் ‘ட்ரீட்மென்ட்டு’க்காகவே அமெரிக்கா போகிறேன்” என்று வருமானவரி அலுவலகத்துக்கு கடிதம் கொடுத்துவிட்டுப்போனார்.
இந்த விவகாரம் வெளியில் கசிந்து, “ஜெயலலிதாவுக்கு விபரீதமான நோய்” என்று, தி.மு.க பத்திரிகையான, முரசொலியில் செய்தி வந்தது. ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை உலுக்கி எடுத்தார்.
இந்தச் செய்தியைப் பரப்பியவர்களை, கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தார். ஜெயலலிதாவின், ஆத்திரத்துக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் அவசியமே இல்லை.
ஏனென்றால், முரசொலியில் வெளியாகி இருந்த அந்தச் செய்தி, ஜெயலலிதாவைவிட, எம்.ஜி.ஆரை, அதிகம் வேதனைப்படுத்தி இருந்தது.
விசாரணையில் இறங்கினார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் கடிதத்தை ‘டீல்’ செய்த அதிகாரிகளை எம்.ஜி.ஆர் ‘டீல்’ செய்தார். அதில் ஒரு அதிகாரிக்கு வேலையே போனது.
ஆனாலும்கூட, எம்.ஜி.ஆருக்கு சமாதானம் ஏற்படவில்லை. அந்தக் கடிதம் தொடர்பான தகவல்களில், ஏதோ ஒரு தவறு ஒளிந்திருப்பதாக அவர் உள்மனம் சொன்னது.
கடிதம் வெளியிட்டவர்களைக் கண்டுபிடித்துவிட்ட எம்.ஜி.ஆரால், வெளியிடச் சொன்னவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதுவும் அவருக்கு உறுத்தலாக இருந்தது.
சசிகலா, ஜெயலலிதா மீது எறிந்த ஆயுதம்!
கடிதத்தை வெளியிட்டவரை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு எம்.ஜி.ஆர் இருந்தார். அதை மனதுக்குள் வைத்துக் கொண்டு, ரகசிய விசாரணை ஒன்றை நடத்திக்கொண்டே இருந்தார்.
ஒரு கட்டத்தில் அவருடைய விசாரணை சசிகலாவிடம் வந்து முடிந்தது. “கடித விவகாரம் எப்படி வெளியானது?” என்று எம்.ஜி.ஆர் சசிகலாவிடம் கேட்டார்.
“ஜெயலலிதாதான் கடிதத்தை வெளியிட்டார்” என்று சசிகலா ஆணித்தரமாக அடித்துச் சொன்னார். அதோடு, வருமானவரி அதிகாரி ஒருவர் போயஸ் தோட்டத்துக்கு வந்து போன விபரங்களையும் எம்.ஜி.ஆரிடம் தெளிவாகச் சொன்னார்.
சசிகலாவின் பதிலில், எம்.ஜி.ஆரின் கேள்விகள் அனைத்துக்கும் பதில் இருந்தது. ஆடிப்போனார் எம்.ஜி.ஆர். “தான் கற்றுக்கொண்ட அரசியலில், இப்படி ஒரு பாடம் சொல்லித்தரப்படவில்லையே!” என்று மிரண்டுவிட்டார்.
இந்தத் தகவலை எம்.ஜி.ஆருக்குச் சொல்லிவிட்டு, அதற்கு உபகாரமாக, பட்டிவீரன் பட்டியில் தனக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு சசிகலா, மெடிக்கல் ‘சீட்’ ஒன்றை வாங்கிக்கொண்டார்.
அதன்பிறகு மூன்று நாட்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைச் சந்திக்கவில்லை. கடித விவகாரத்தில் நாடகமாடிய ஜெயலலிதா மீது அவர் கோபத்தில் இருந்தார்.
அதன்பிறகு, வழக்கம்போல், மாம்பலம் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா சந்திப்பு நடைபெற்றது. ஜெயலலிதா மீதான எம்.ஜி.ஆரின் கோபம் அவ்வளவுதான்.
திசை திருப்பிய நடராஜன்!
பி.ஆர்.ஓ-ஆக இருந்த நடராஜன், பதவி உயர்வுக்காக போராடிக் கொண்டு இருந்தார். நடராஜன் பணிபுரிந்த துறையின் அமைச்சராக அப்போது இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அவருக்கு நெருக்கமானவர், ‘தாய்’ பத்திரிகை ஆசிரியர் வலம்புரிஜான்.
அதனால் நடராஜன், அடிக்கடி வலம்புரிஜானை சந்தித்து, “எனது பதவி உயர்வுக்காக ஆர்.எம்.வீ-யிடம் பேசுங்கள்” என்று கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தார்.
ஆனால், ஏனோ நடராஜனின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அப்போதே ஆர்.எம்.வீரப்பன், நடராஜனை கணித்து இருந்திருக்க வேண்டும். ஆனால், தன் கோரிக்கையை ஆர்.எம்.வீ-க்கு கொண்டு செல்லாமல், வலம்புரிஜான்தான் முட்டுக்கட்டை போடுகிறார் என்று புரிந்துகொண்டார் நடராஜன்.
அதனால், நடராஜனின் கோபம் அவர் மீது திரும்பி இருந்தது. கோபத்தைத் தீர்த்துக்கொள்ள நடராஜனுக்கு இன்னுமொரு சந்தர்ப்பம், கடித விவகாரத்தில் கிடைத்தது.
ஜெயலலிதாவைச் சந்தித்த நடராஜன், “கடித விவகாரத்தை வெளியிட்டது நீங்கள்தான் என்று வலம்புரிஜான் எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டார்.
அதனால்தான், எம்.ஜி.ஆர் உங்கள் மீது கோபமாக இருந்தார்” என்று ஒரு தகவலைச் சொன்னார். இப்போது, ஜெயலலிதாவின் கோபம், வலம்புரிஜான் மீது திரும்பியது.
வலம்புரிஜானை வார்த்தைகளால் எரித்துவிட்டார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை கடித விவகாரத்தை வெளியில்விட்டது ஜெயலலிதா.
ஜெயலலிதாவைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் தன்னை எம்.ஜி.ஆரிடம் போட்டுக் கொடுத்தது வலம்புரிஜான். இரண்டு வில்லங்கமான புரிதல்களுக்கு இடையில், சசிகலா-நடராஜன் இருந்தனர்.
போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுக்கும், இராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு விசுவாசமானவர்களாகவும் சசிகலா-நடராஜனின் பயணம் தொடர்ந்தது.
கதை தொடரும்…
(இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்)