உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமண மண்டபத்திலிருந்து மணமகனை அவருடைய முன்னாள் காதலி துப்பாக்கியைக் காட்டி கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் அசோக் யாதவ் என்பவருக்குத் திருமணம் நடைபெற இருந்தது.
அவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அவர் தன்னுடன் பணியாற்றிய பெண் ஒருவரை காதலித்துள்ளார்.
இருவரும் சில மாதங்கள் காதலித்துள்ளனர். இந்நிலையில் அசோக்குக்கு அவரது வீட்டில் திருமணத்துக்குப் பெண் பார்த்துள்ளனர்.
இதையடுத்து, அசோக் அவருடைய காதலியுடன் பழகுவதைத் தவிர்த்துள்ளார். அவருடைய காதலி அசோக்கைச் சந்திக்க பலமுறை முயன்றுள்ளார்.ஆனால் பார்க்க முடியவில்லை.
இறுதியில் அசோக்கிற்குத் திருமணம் என்ற செய்தியே அவருக்குக் கிடைத்துள்ளது. செய்தியை அறிந்த அந்தப் பெண் திருமணத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளார்.
திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில், அசோக் மற்றும் உறவினர்கள் திருமண மண்டபத்தில் இருந்துள்ளனர். அந்நேரத்தில் எஸ்.யு.வி வகை காரொன்று திருமண மண்டபத்திற்கு வந்தது. அந்தக் காரிலிருந்து இறங்கிய அசோக்கின் காதலியுடன் மூன்று ஆண்கள் வந்துள்ளனர்.
திடீரெனத் துப்பாக்கியை எடுத்த அவர்கள், துப்பாக்கி முனையில் அசோக்கை காரில் ஏற்றிச் சென்றனர். திருமண மண்டபத்திலிருந்து மணமகனை, பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.