யாழ்ப்பாணம் – இளவாலைப் பகுதியில் இருந்து இரண்டு ஆட்டினை முச்சக்கர வண்டியில் கடந்தி வந்த யாழ்ப்பாணம் 5 சந்தி இளைஞர்கள் மூவர் நேற்றைய தினம் இணுவில் பகுதியில் வைத்து உரிமையாளர்கள் மற்றும் பொலிசாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
இளவாலைப் பகுதியில் வீட்டின் முன்னாள் கட்டி நின்ற ஆடுகள் இரண்டினை களவாடி முச்சக்கர வண்டியில் கடத்த முற்பட்டவர்களை ஆடு எழுப்பிய சத்தத்தினையடுத்து உரிமையாளர் துரத்தி வந்துள்ளார்.
இவ்வாறு அவசரமாக துரத்தியவர் தலைக்கவசம் இன்றி பயணிப்பதனை அவதானித்த பொலிசார் வழிமறிக்க ஆட்டின் உரிமையாளர் விடயத்தினைக் கூறவே பொலிசாரும் இணைந்து விரட்டியுள்ளனர்.
இதனால் சுன்னாகம் சந்தியில் இருந்த சமிக்கை விளக்கின் முன்னாள் நிறுத்தாது முச்சக்கர வண்டி வேகமாகப் பயணித்துள்ளது.
இவ்வாறு வேகமாகப் பயணிப்பதனை பலரும் சந்தேக கண்ணோடு பார்த்தவேளையில் பின்னாள் மோட்டார் சைக்கிளில் தனியாரும் அதனைத் தொடர்ந்து பொலிசாரும் விரட்டிச் சென்றதனை அவதானித்த வேளையில் இணுவில் பிரதேசத்தில் பொலிசார் முச்சக்கர வண்டியினை நெருங்கி நிறுத்துமாறு உத்தரவிட்டபோதும் முச்சக்கரவண்டி தப்பிச் செல்லவே முயன்றுள்ளது.
இதனால் முந்திச் சென்ற போலிசார் மீண்டும் மறித்தபோதும் முச்சக்கர வண்டியை நிறுத்த மறுத்து தப்பிச் சென்றனர்.
இதனால் மீண்டும் விரட்டிய பொலிசார் கைத்துப்பாக்கியை காட்டி எச்சரித்தவேளையில் திருடர்கள் வேறு வழியின்றி நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து ஆடு உரிமையாளரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆட்டினை இனம் காட்டினார். இதனையடுத்து திருடர்கள் மூவரும் முச்சக்கர வண்டியுடன் ஆடு சகிதம் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.
குறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு ஆட்டின் உரிமையாளரின் விடா முயற்சியினால் அவரது வாழ்வாதார மறியாடு காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.