காவேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் கருணாநிதியின் உடல்நிலைகுறித்துக் கேட்டறிய, அரசியல் தலைவர்களும் திரையுலகப் பிரபலங்களும் மருத்துவமனைக்கு வந்துசெல்கின்றனர்.
இதேபோல, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தி.மு.க தொண்டர்கள் மருத்துவமனை வாசலில் தொடர்ந்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், பட்டாபிராமைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு பயிலும் சிறுமி மிச்செல் மிராக்ளின், கருணாநிதி உடல்நலம் பெறவேண்டி கடிதம் எழுதியிருந்தார்.
அவர், ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்தில், `அன்புள்ள டாக்டர் கருணாநிதி தாத்தாவுக்கு, எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல்போனதாகக் கேள்விப்பட்டபோது, எனக்கு அழுகையாக வந்தது.
அன்று இரவு தூங்குவதற்கு முன்னர் உங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன்.
தலைவர் கலைஞர் @kalaignar89 உடல்நலம் பெற வேண்டி கடிதம் எழுதிய சுட்டிக் குழந்தை மிச்சல் மிராக்ளின் மற்றும் அவரது தாயாரை சந்தித்து, அன்போடு உரையாடி மகிழ்ந்தார் கழக செயல் தலைவர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள். @mkstalin #GentlemanMKS pic.twitter.com/77HsDAW1kc
— DMK – Dravida Munnetra Kazhagam (@arivalayam) 2 août 2018
நான் பிரார்த்தனை செய்ததால், உங்களுக்கு உடல்நிலை சரியாகிவிட்டதாக மறுநாள் காலை என் அம்மா சொன்னார். அதைக் கேட்டதும் மகிழ்ச்சியாகப் பள்ளிக்குச் சென்றேன்’ என்று எழுதியிருந்தார்.
இந்தக் கடிதம், தி.மு.க ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது. சிறுமியின் இந்த நெகிழ்ச்சியான கடிதம், செய்தித்தாள்களிலும் இடம்பிடித்தது. இந்நிலையில், சிறுமி மிச்செல் மிராக்ளின் மற்றும் அவரது தாயாரை ஸ்டாலின் சந்தித்துப் பேசியுள்ளார்.நேற்று நடந்த இந்தச் சந்திப்பின்போது, “கலைஞரை எப்படித் தெரியும்? நான் யாரெனெத் தெரிகிறதா? என சிறுமியிடம் ஸ்டாலின் கேள்வி எழுப்பவே, செய்திகளில் உங்களையும், கருணாநிதியையும் பார்ப்பேன் எனக் கூறினார்.
இதேபோல, அவர் படிப்பு சம்பந்தமாகவும் கேள்விகளைக் கேட்ட ஸ்டாலினிடம், கருணாநிதி தாத்தா வீட்டுக்கு வந்தவுடன் கூப்பிடுங்க, நான் பார்க்க வேண்டும்” எனக் கூறினார். இந்தச் சம்பவம் அங்குள்ளவர்களை நெகிழவைத்தது. இந்த வீடியோ காட்சிகள் தி.மு.க தலைமைக் கழகம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.