வடக்கு மாகாண ஆளுனராக மீண்டும் மேஜர் ஜெனரல் சந்திரசிறி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் எழுந்துள்ள நெருக்கடி நிலை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த வாரம் ஆராயவுள்ளது.
இராணுவப் பின்னணி கொண்ட ஆளுனரை மாற்றி, சிவில் ஆளுனரை நியமிக்க வேண்டும் என்ற, கோரிக்கையை சிறிலங்கா அதிபர் உதாசீனம் செய்துள்ளது, வட மாகாண முதல்வர் மற்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பெரிதும், அதிர்ச்சியையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவில் ஆளுனரை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக, வடமாகாண முதலமைச்சருக்கு வழங்கிய வாக்குறுதியை சிறிலங்கா அதிபர் மீறியிருக்கும் நிலையில், அதற்கு எதிரான பதில் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கருத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வலுத்துள்ளது.
இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து, வடமாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்தநிலையில், சந்திரசிறியின் மீள்நியமனம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக, ஆராய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் முக்கிய கூட்டம் இந்தவாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
வரும் 19ம் நாள் இரா.சம்பந்தன் தலைமையில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தில் பதில் நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற ஊறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்தக் கலந்துரையாடலின் பின்னர், வடமாகாண முதலமைச்சர் பதவியை விட்டு விலக முடிவெடுக்கலாம் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆளுனரின் மீள்நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், முதலமைச்சரைப் பதவி விலக வட மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் அழுத்தம் கொடுத்துள்ளதாக, நேற்றுமுன்தினம் வெளியான சண்டே ரைம்ஸ் வாரஇதழின் அரசியல் பத்தியிலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எனினும், அத்தகைய எந்த எதிர்ப்பு நடவடிக்கை குறித்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ வட்டாரங்கள் உறுதிப்படுத்தவில்லை.
அதேவேளை, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, முதல்வர் விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் அரங்கில் இருந்து அகற்றுவதற்கு சிறிலங்கா அரசதரப்பும் அதற்கு விசுவாசமான தரப்புகளும், தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைமைச் செயலருக்கு வழங்கிய உத்தரவை வாபஸ் பெற விக்னேஸ்வரன் சம்மதம்
15-07-2014
இலங்கையில் வட மாகாணத்தின் தலைமைச் செயலாளர் விஜயலட்சுமி ரமேஷுக்கு தான் வழங்கியிருந்த உத்தரவுகளை வாபஸ் பெறுவதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உச்சந்தீமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வழங்கிய உத்தரவுகள் காரணமாக தனது மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாட்டி தலைமைச் செயலர் விஜயலட்சுமி ரமேஷ் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முதலமைச்சர் தனது உத்தரவுகளை வாபஸ் பெறத் தயாரென அவர் சார்பாக ஆஜரான வழக்குரைஞர் சுமந்திரன் தெரிவித்தார்.
தலைமைச் செயலரும் முதலமைச்சரும் இந்த விவகாரத்தை சுமூகமாகத் தீர்த்துக்கொள்வதையே நீதிமன்றம் விரும்புகிறது என தலைமை நீதிபதி கூறியதை அடுத்து இது நடந்ததாக மனுதாரர் சார்பில் ஆஜ்ரான சட்டத்தரணி கோமி தயாசிறி கூறினார்.
இதேவேளை தலைமைச் செயலரை நீக்குவதென்றாலும் இடமாற்றம் செய்வதென்றாலும் அதனை சுமுகமாக மேற்கொள்ள வேலைத்திட்டம் ஒன்றை வழங்குமாறு நீதிமன்றம் கோரியுள்ளதாக முதலமைச்சர் சார்பில் ஆஜரான வழக்குரைஞ்சர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தான் வட மாகாணத்தை விட்டு வெளியே செல்ல வேண்டுமானால் முதலமைச்சரின் முன்னனுமதியைப் பெறவேண்டுமென நிபந்தனை விதித்திருந்த முதலமைச்சரின் உத்தரவு தனது அடிப்படை உரிமையை மீறும் செயலென தலைமைச் செயலர் விஜயலட்சுமி மனுவில் குறிப்பிட்டிருந்தார்.