பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து மாமியையும் மருமகளையும் நகர முடியாமல் கை கால்களைக் கட்டி வாயைப் பிளாஸ்ரர் போட்டு ஒட்டிவிட்டு அங்கிருந்த அலுமாரியைச் சல்லடை போட்டு தேடி அதற்குள் இருந்த சுமார் ஒரு இலட்சம் ரூபாவை கொள்ளை அடித்துக் கொண்டு வாகனத்தில் தப்பிச்சென்ற கொள்ளைக் கோஷ்டியைச்சேர்ந்த நால்வரைக் கைது செய்த பொலிஸார் கொள்ளைக்குப் பயன்படுத்திய வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிலுள்ள ஆனைக்கோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இக்கொள்ளை பற்றிக் கூறப்படுவதாவது;
கடந்த வியாழக்கிழமை பட்டப்பகல் 12 மணியளவில் ஒரு வாகனத்தில் வந்த கொள்ளைக் கோஷ்டியினர் சற்று தூரத்தில் வாகனத்தை மறைவாக விட்டுவிட்டு ஆண்கள் இல்லாத நேரம் பார்த்து மேற்படி வீட்டிற்குள் புகுந்து மாமியையும் மருமகளையும் கட்டி போட்டு விட்டு அங்கிருந்த அலுமாரியைச் சல்லடை போட்டுத் தேடி சுமார் ஒரு இலட்சம் ரூபாவைக் கொள்ளையடித்துக்கொண்டு வாகனத்தில் ஏறித்தப்பிச் சென்று விட்டனர்.
இக்கொள்ளை பற்றி ஆனைக்கோட்டைப் பொலிஸில் புகார் செய்ததைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நால்வரைக் கைது செய்ததுடன் மேற்படி மருமகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட வானும் ஓமந்தையில் வைத்துக்கைப்பற்றப்பட்டது. பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.