நீண்டகாலம் இழுபறி நிலைக்குள்ளாகியிருந்த வவுனியாவுக்கான பொருளாதார நிலையத்தை வவுனியா தேக்கவத்தையில் அமைப்பதற்கான முடிவு இன்று ஏகமானதாக எடுக்கப்பட்டது.
வவுனியா அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.புஷ்பகுமார தலைமையில் கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், முதலமைச்சரின் செயலாளர் வி.கேதீஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் வவுனியா கச்சேரியில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், இந்தத் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டது.
இன்று வவுனியா கச்சேரியில் இடம்பெற்ற கூட்டத்தில் வவுனியா விவசாய சங்கப் பிரதிநிதிகளும், வவுனியா மாவட்டத்தை தளமாகக்கொண்ட மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்று, தத்தமது கருத்துக்களை வெளியிட்டனர்,
இக்கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர்களான ஹரிசன், றிசாத் பதியுதீன் ஆகியோர், வவுனியா தேக்கவத்தைக்குச் சென்று பொருளாதார நிலையத்தை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்ட தேக்கவத்தை என்ற இடத்தைப் பார்வையிட்டனர்.
மஸ்தான் எம்.பி, வடமாகாண சபை உறுப்பினர் பி.ஜெயதிலக,வவுனியா அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.புஷ்பகுமார, முதலமைச்சரின் செயலாளர் வி.கேதீஸ்வரன், முதலமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் பி.இராஜேஸ்வரி ஆகியோர் உட்பட விவசாய சங்கப் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றிருந்தனர்.
தேக்கவத்தை மிகவும் பொருத்தமான இடமென உறுதிப்படுத்தப்பட்டு பின்னர் அமைச்சர்கள், அதிகாரிகள், விவசாயப் பிரதிநிதிகளுடன் மீண்டும் ஒரு கலந்துரையாடல் வவுனியா கச்சேரியில் இடம்பெற்றது.
இதேவேளை எதிர்வரும் 27 ஆம் திகதி அமைச்சர் ஹரிசனுக்கும், விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்குமான சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
பொருளாதார நிலையத்தில் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதெனவும், எவ்வாறான விளைபொருட்களை கொண்டு வருவது எனவும் கலந்துரையாடுவதற்காகவே விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.