வரலாற்றில் முதன்முதலாக எரிக்கப்பட்ட பெண் யார்?
எனக்குத் தெரியாது
ஆனால் கடைசியாக எரிக்கப்பட்ட பெண்ணாக யாராக இருப்பார் என்பது தான் என்னுடைய கவலை
கடைசியாக எரிக்கப்பட்டது யாராக இருக்கும்?’ – சஞ்சாலியின் தாயார் அனிதாவின் அழுகுரலைக் கேட்டபோது, ராமசங்கர் `வித்ரோஹி’யின் வரிகள் என் மனதில் தோன்றின. என் காதுகள் வெடித்துவிடுவதைப் போல உணர்ந்தேன்.
15 வயது சஞ்சாலியின் மரணச் செய்திகைக் கேட்டு டிசம்பர் மாதத்தின் கடைசி வாரமும், வட இந்தியாவின் குளிர்ந்த காற்றும் கூட அழுவதைப் போல இருக்கிறது.
ஆக்ரா அருகே மல்புரா மார்க் பகுதியில் டிசம்பர் 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை உயிரோடு எரிக்கப்பட்ட சிறுமி சஞ்சாலி.
`சாவதற்கு முன் என் மகள், எனக்குப் பசிக்கிறது, அம்மா சாப்பிட ஏதாவது கொடு என திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தாள்.
எனக்குத் தாகமாக இருக்கிறது, குடிப்பதற்கு தண்ணீர் கொடு என்று கேட்டாள். ஆனால் எதுவும் தரக் கூடாது என டாக்டர்கள் மறுத்துவிட்டார்கள். அவளுக்கு என்னால் எதுவும் தர முடியாமல் போய்விட்டது.”
உயிரோடு எரிக்கப்பட்ட சஞ்சாலியின் கடைசி நொடிகளை நினைவுபடுத்திக் கூறிய அனிதா, தன் மகள் பசியாலும், தாகத்தாலும் துடித்ததைக் குறிப்பிடுகிறார். “பாவப்பட்ட என்னுடைய மகள் எங்களை பசியிலும் தாகத்திலும் விட்டுச் சென்றுவிட்டாள்” என்று அனிதா கூறினார்.
டஜனகரி ஆக்ராவின் ஒரு பகுதியில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் களைகட்டிக் கொண்டிருந்தன. 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாலாவ் கிராமத்தில் ஜாதவ் குடியிருப்பில் அழுகையாக இருந்தது.
என் மகள் பள்ளிக்கூடத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, யாரோ அவள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டார்கள்
`டாட்டா சொல்லிவிட்டுப் போனாள், திரும்பி வரவே இல்லை’
சஞ்சாலியின் தாயாருடைய கண்களுக்குக் கீழே கருப்பு வளையங்கள் தோன்றியுள்ளன. கடந்த ஒரு வார காலமாக அழுதுகொண்டே இருந்திருப்பார் போல.
“எல்லா நாட்களையும் போல அன்றைய நாளும் மகிழ்ச்சியான நாளாகத்தான் இருந்தது. வழக்கம் போல சஞ்சாலி எனக்கு டாட்டா சொல்லிவிட்டு பள்ளிக்கூடத்துக்குச் சென்றாள்.
ஆனால் அவள் திரும்பி வரவே மாட்டாள் என்று யாருக்குத் தெரியும்” என்று உடைந்த குரலில் பேசினார் அனிதா.
உன் மகளை எரித்துவிட்டார்கள்’
டிசம்பர் 18 ஆம் தேதி, பிற்பகல் ஒரு மணி இருக்கும். சஞ்சாலியின் தாயார் வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
அந்தக் காலனியைச் சேர்ந்த ஒரு பையன் திடீரென ஓடிவந்து “சஞ்சாலி மீது யாரோ சிலர் நெருப்பு வைத்துவிட்டார்கள்.
நான் அதை அணைக்க முயற்சி செய்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. சீக்கிரம் செல்லுங்கள்” என்று கூறினான்.
இதைக் கேட்டதும் சஞ்சாலியின் தாயார் அங்கே ஓடினார். “நான் அங்கே சென்றபோது என்னுடைய மகள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.
எனக்கு கொஞ்சம் முன்னதாகவே காவல் துறை வாகனங்களும் அங்கு வந்துவிட்டன. அவளை காவல் துறை வாகனத்தில் எஸ்.எம். மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்” என்று அவர் தெரிவித்தார்.
“அவளை மார்பில் தாங்கியவாறு நான் அந்த வாகனத்தில் அமர்ந்திருந்தேன். யார் இப்படி செய்தது என்று அவளிடம் கேட்டேன்.
சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் ஹெல்மட் அணிந்து வந்தார்கள் என்று மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது.
பெட்ரோல் போன்ற எதையோ தன் மீது தெளித்து தீ வைத்துவிட்டு, சாக்கடையில் தள்ளிவிட்டார்கள் என்று கூறினாள்.”
சஞ்சாலி எரிக்கப்பட்ட சாலை மல்புரா சாலையை லாலாவ் கிராமத்துடன் இணைக்கக் கூடியது. அந்த இடத்தில் இருந்து சஞ்சாலியின் வீடு மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சாலையோரத்தில், சஞ்சாலி தள்ளிவிடப்பட்ட இடத்தில், எரிந்து போன செடிகளையும், சாம்பல்களையும் பார்க்க முடிந்தது.
பள்ளிக்கூடம் முடிந்து சைக்கிளில் மதியம் சஞ்சாலி வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.
இந்தச் சாலை நடமாட்டம் இல்லாமல் ஒருபோதும் இருக்காது என்பது அதிர்ச்சிக்குரிய மற்றொரு விஷயம். வாகனங்கள் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் எப்போதும் அங்கு இருக்கும்.
சஞ்சாலி ஐ.பி.எஸ். அதிகாரி அல்லது பைலட் ஆக வேண்டும் என விரும்பினாள்’
எஸ்.எம். மருத்துவமனையில் டாக்டர்களால் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு சஞ்சாலியை அனுப்பினார்கள்.
“அம்மா, நான் உயிர் பிழைத்தால் நீதிக்காக நானே போராடுவேன். நான் செத்துவிட்டால் எனக்காக நீ போராட வேண்டும் என்று அவள் சொல்லிக் கொண்டே இருந்தாள்” என்று அவரது தாயார் தெரிவித்தார்.
“என் மகள் போய்விட்டாள். இப்போது அவளுக்கான நீதிக்காக நான் போராட வேண்டும்.”
“அவள் படிப்பது, கோச்சிங் தருவது, வீட்டு வேலைகள் செய்வது, சகோதரர்கள் சகோதரிகளுடன் விளையாடுவது என அவள் இருப்பாள்.
வீட்டு வேலைகளில் எனக்கு உதவி செய்வாள். எனக்கும் அவளுடைய அப்பாவுக்கும் சண்டை வந்தால், அவள் எனக்கு சாப்பாடு தருவாள்….. இப்போது இதையெல்லாம் யார் செய்வார்?” என்று சஞ்சாலியின் தாயார் கூறினார்.
”என் மகள் புத்திசாலி. ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று அவள் விரும்பினாள். பைலட் அல்லது ஐ.பி.எஸ். அதிகாரியாக ஆக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பாள்.
இப்போது நீங்கள் என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள். தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஊடகத்தினரும், உறவினர்களும் இங்கே வருகிறார்கள்.
எங்களால் நிறைய தெரிந்து கொள்ள முடியவில்லை. சில நாட்கள் கழித்து இங்கே யாரும் வர மாட்டார்கள். அப்போது தான் உண்மையான சவாலை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று சஞ்சாலியின் தந்தை ஹரேந்திர சிங் ஜாதவ் கூறினார்.
சஞ்சாலியின் மூத்த சகோதரி அஞ்சலி சில நேரங்களில் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கிறார், சில நேரங்களில் தாயாருக்கு ஆறுதலாக இருக்கிறார்.
”பத்தாம் வகுப்புத் தேர்வில் நீ 81 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கிறாய். நான் 90 சதவீத மதிப்பெண் எடுப்பேன் என்று அவள் என்னிடம் சொல்வாள்.
ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று அவள் விரும்பினாள். வாழ்க்கையில் மேலே செல்ல வேண்டும் என்று விரும்பினாள்” என்று பி.பி.சி.-யிடம் அஞ்சலி தெரிவித்தார்.
சஞ்சாலியின் மரணத்துக்குப் பிறகு உடன்பிறந்த நான்கு பேர் இருக்கிறார்கள். இரண்டு சகோதரிகளும், இரண்டு சகோதரர்களும் உள்ளனர்.
”அவள் மன அழுத்தத்தில் இருந்து ஒருபோதும் நான் பார்த்தது கிடையாது. எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பாள்” என்று சஞ்சாலி படித்த `அஷ்ரபிதேவி ச்சிட்டு சிங் இடைநிலைக் கல்லூரி’ பள்ளியின் அறிவியல் ஆசிரியர் டோர்னான் சிங் கூறினார்.
’யாருடனும் பகைமையோ சண்டையோ கிடையாது’
இந்தச் சம்பவம் நடந்த பிறகு அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பள்ளிக்கூடத்துக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்கள் என்று, சஞ்சாலியுடன் பள்ளிக்குச் செல்லும் தோழி டாமினி கூறினார்.
”எல்லா பெண்களுக்கும் பயமாக இருக்கிறது. யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியவில்லை” என்று பி.பி.சி.-யிடம் டாமினி கூறினார்.
பெண்கள் மட்டுமில்லாமல், 7, 8 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களும் கூட பயம் காரணமாக பள்ளிக்கூடம் செல்வதை நிறுத்திவிட்டார்கள் என்று அந்தக் காலனியில் வசிக்கும் சில பெண்கள் தெரிவித்தனர்.
மரணத்துக்கு முன்பு சஞ்சாலி அளித்த வாக்குமூலத்தில், தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் தெரியாது என்று கூறியிருக்கிறார். அவருக்கு யாருடனும் பகைமையோ சண்டையோ கிடையாது என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.
”தினமும் மாலையில் பிள்ளைகளை அழைத்து, அன்றைய நாள் எப்படி போனது என்று கேட்பேன். ஏதாவது நடந்திருந்தால் நிச்சயமாக எங்களிடம் சொல்லியிருப்பாள்” என்று சஞ்சாலியின் தந்தை ஹரேந்திர சிங் ஜாதவ் கூறினார்.
200 முதல் 250 வீடுகள் வரை உள்ள லாலாவ் கிராமத்தில் பெருமளவு ஜாட் மற்றும் ஜாதவ் சமூகத்தவர்கள் இருக்கிறார்கள். ஜாதவ் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.
இருந்தபோதிலும், கிராமத்தில் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள் என்று சஞ்சாலியின் தந்தை ஹரேந்திரா கூறினார். தன் மகள் கொல்லப்பட்டதில் சாதி அடிப்படையிலான காரணம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்றார் அவர்.
உறவுப் பையன் தற்கொலையும் காவல் துறையினர் முடிவும்
சஞ்சாலியின் உறவுக்காரரான யோகேஷ், சம்பவத்திற்கு மறுநாள் தற்கொலை செய்து கொண்டதால் இந்தச் சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.
காவல் துறையினரின் கொடுமை தாங்காமல் அதிர்ச்சியில் தன் மகன் தற்கொலை செய்து கொண்டதாக யோகேஷின் தாயார் ராஜன்தேவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
குற்றச் செயல் நடந்து எட்டாவது நாளில், யோகேஷ் தான் இந்த வழக்கில் பிரதான குற்றச்சாட்டுக்கு ஆளானவர் என்று காவல் துறையினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
காவல் துறை என்ன சொல்கிறது?
”யோகேஷ் மீது சந்தேகப்படுவதற்கு ஒரு காரணம் அல்ல, நிறைய காரணங்கள் உள்ளன. முதலாவது காரணம் யோகேஷின் தற்கொலை. ஒருவேளை சஞ்சாலி மீது ஈர்ப்பு ஏற்பட்டு, அதற்கு அந்தப் பெண் மறுத்திருக்கலாம்” என்று ஆக்ரா எஸ்.எஸ்.பி. அமித் பதக் பி.பி.சியிடம் கூறினார்.
யோகேஷ் தவிர, அவருடைய உறவினர்கள் ஆகாஷ், விஜய் ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பிரதான குற்றச்சாட்டுக்கு ஆளானவராக யோகேஷ் பெயரைக் குறிப்பிடுவதற்கு பின்வரும் வாதங்களை காவல் துறையினர் முன்வைக்கின்றனர்:
- சஞ்சாலிக்கு யோகேஷ் எழுதிய சில கடிதங்களை யோகேஷின் வீட்டில் இருந்து எடுத்திருப்பதாகக் காவல் துறை கூறுகிறது.
- யோகேஷின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸப் தகவல்கள்.
- யோகேஷின் செல்போனில் சஞ்சாலியின் புகைப்படங்கள். அதில் பள்ளிக்கூட சீருடையுடன் உள்ள ஒரு படமும் உள்ளது.
- சஞ்சாலிக்கு ஒரு சைக்கிளை யோகேஷ் பரிசாகக் கொடுத்ததாகவும், அது பரிசாகக் கிடைத்தது என்று வீட்டில் சொல்வதற்காக போலியான ஒரு சான்றிதழை தயாரித்துக் கொடுத்ததாகவும் காவல் துறையினர் கூறுகின்றனர்.
- `Crime Patrol’ விரும்பிப் பார்க்கக் கூடிய யோகேஷ், அதன் காரணமாக கொலை செய்யும் எண்ணம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்றும் காவல் துறையினர் கூறுகின்றனர்.
- இந்தக் கொலையை செய்யுமாறு யோகேஷ் தான் தங்களை தூண்டியதாகவும், அதற்காக ரூ.15,000 தருவதாக உறுதி அளித்திருந்தார் என்றும் கைதாகியுள்ள மற்ற இருவரும் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
காவல் துறையினரின் கருத்தில் சஞ்சாலி குடும்பத்தினருக்கு அதிருப்தி
காவல் துறையினரின் முடிவுகளில் சஞ்சாலியின் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் உடன்பாடு இல்லை.
“நடு ராத்திரியில் மல்புரா காவல் நிலையத்துக்கு என்னை காவல் துறையினர் அழைத்துச் சென்றார்கள்.
நான் எதுவும் பேசக் கூடாது என்றும், அமைதியாகக் கேட்க வேண்டும் என்றும் சொன்னார்கள். கீழே உட்கார்ந்திருந்த ஒரு பையனைக் காட்டினார்கள்.
அவனை அடித்து, மோசமாகத் துன்புறுத்தியிருந்ததைப் போலத் தெரிந்தது….” என்று சஞ்சாலியின் தந்தை ஹரேந்திர சிங் ஜாதவ் பி.பி.சி.-யிடம் தெரிவித்தார்.
”காவல் துறையினர் கேட்டபோது, அந்தப் பையன் எல்லாவற்றையும் சொன்னான். சொல்லிக் கொடுத்து அவன் சொன்னதைப் போல இருந்தது. கடந்த மாதம் நான் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பியபோது இரண்டு பேர் என்னைத் தாக்கினார்கள்.
ஏதோ ஒரு பொருளால் என் தலையில் அவர்கள் அடித்தார்கள். (யோகேஷ் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற இருவருடன் சேர்ந்து) தாங்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அந்தப் பையன் கூறினான்” என்று ஹரேந்திர சிங் தெரிவித்தார்.
”நான் தாக்கப்பட்டது இரவு 9 மணிக்கு. ஆனால் மாலை 6 மணிக்கு தாக்கியதாக அந்தப் பையன் சொன்னான்.
காவல் துறையினர் கூறிய கதை பொய் என்பதை இதில் இருந்தே நான் தெரிந்து கொண்டேன். செல்போனில் இருந்த கடிதங்களின் படங்களை காவல் துறையினர் என்னிடம் காட்டினார்கள்.
ஆனால் ஒரிஜினலை காட்டவில்லை. இப்படியிருக்கும் போது அது யோகேஷ் எழுதியது தான் எப்படி நான் நினைக்க முடியும்? மற்ற இருவரும் எங்களுடைய உறவினர்கள் என்று காவல் துறையினர் கூறுகின்றனர்.
ஆனால் முன் எப்போதும் அவர்களை நாங்கள் சந்தித்ததே கிடையாது” என்று, இதை மறுப்பதற்கான காரணங்களாகப் பட்டியலிடுகிறார் ஹரேந்திர சிங்.
உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத காவல் துறையினர், இறந்துவிட்ட தன் மகன் மீது பழியைப் போட்டு வழக்கை முடித்துவிடப் பார்க்கிறார்கள் என்று யோகேஷின் தாயார் ராஜன்தேவி கூறினார்.
என்னை நீங்கள் நம்ப வேண்டாம். யோகேஷ் எப்படிப்பட்டவன் என்று இந்தக் காலனி முழுக்க கேட்டுப் பாருங்கள். என் மகன் இறந்துவிட்டான்.
ஆனால் சஞ்சாலிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என் மகன் மீது விழுந்த பழிச் சொல்லை நீக்க விரும்புகிறேன்” என்றார் ராஜன்தேவி.