புதுடெல்லி : ஈராக் கில் தீவிரவாதிகள் பிடியில் சிக்கி இருந்த 46 இந்திய நர்சுகள், 20 நாளுக்கு பின் நேற்று பத்திரமாக இந்தியா திரும்பினர்; இவர்களை தவிர, போரினால் அங்கு பரிதவித்த 111 இந்திய தொழிலாளர்கள் உள்பட 157 பேரும் திரும்பினர்.தனி விமானத்தில் அழைத்து வரப்பட்ட அவர்களை கொச்சி, ஐதராபாத், பெங்களூர், சென்னை விமான நிலையத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
இதனிடையில் பல்வேறு பகுதியில் தவித்த, 600 இந்தியர்களை அடுத்த இரு நாள்களில் பத்திரமாக அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவர்களையும் சேர்த்து இதுவரை ஈராக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1200 பேர் அரசின் செலவில் அழைத்து வர ஏற்பாடுகளை மத்திய வெளியுறவுத் துறை செய்துள்ளது குறிப்பிடதக்கது.
ஈராக்கில் ராணுவத்துக்கு எதிராக சன்னி முஸ்லிம் பிரிவினர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் இணைந்து கடந்த ஒரு மாதமாக போரிட்டு வருகிறது.
இதில் நாட்டின் வடக்குப் பகுதியில் பல்வேறு நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றினர். மோசூல் நகரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 40 இந்தியர்களை தீவிரவாதிகள் கடத்தினர். இதில் ஒருவர் தப்பி, நாடு திரும்பினார்.
இதனிடையில் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த திக்ரித் நகரில் பணிபுரிந்து வந்த 46 இந்திய நர்சுகள், மருத்துவமனையிலேயே தஞ்சம் புகுந்தனர். இரு தினங்களுக்கு முன்பு அவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் தீவிரவாதிகள். தீவிரவாதிகள் பிடியில் சிக்கியவர்களை மீட்பதற்காக மத்திய வெளியுறவு அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
46 பேரில் தூத்துக்குடியைச் சேர்ந்த மோனிஷாவை தவிர மற்ற 45 பேரும் கேரளத்தை சேர்ந்தவர்கள். அதையடுத்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடந்த 3 நாளாக டெல்லியில் முகாமிட்டு மீட்புப் பணிகளை துரிதபடுத்தினார்.
இதனிடையில் நேற்று முன்தினம் 46 நர்சுகளையும் திக்ரித் நகரிலிருந்து வெளியேற்றிய தீவிரவாதிகள், வாகனங்களில் அவர்களை வேறொரு இடத்துக்கு அழைத்து சென்றனர்.
அதைத் தொடர்ந்து நர்சுகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, நர்சுகளை விடுவிப்பதாக தீவிரவாதிகள் அறிவித்தனர். திக்ரித் நகரிலிருந்து மோசூல் நகரத்துக்கு அழைத்து செல்லப்பட்ட நர்சுகள், பின்னர் எர்பில் நகரில் உள்ள விமான நிலையம் அருகே இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
டெல்லியில் இருந்து சென்ற சிறப்பு விமானம் மூலம் 46 நர்சுகள் மற்றும் ஈராக்கில் பரிதவித்த 111 பேர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று காலை மும்பை வந்து சேர்ந்த விமானம், எரிபொருள் நிரப்பிய பிறகு கொச்சினுக்கு சென்றது.
அங்கு குழுமியிருந்த உறவினர்கள், நண்பர்கள், கேரள முதல்வர் உம்மன் சாண்டி, அமைச்சர்கள், அதிகாரிகள், நர்சுகளை கண்ணீர் மல்க வரவேற்றனர்.இரு நாட்களில் 600 பேர் வருகை: ஈராக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்து 600 இந்தியர்களை அடுத்த இரு நாள்களில் நாடு திரும்ப வசதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 200 பேர் இன்று (நேற்று) நள்ளிரவுக்குப் பின் டெல்லி வந்து சேர்ந்தனர் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.இந்த 200 பேரும் நஜாப் பகுதியில் இருந்து ஈராக்கின் சிறப்பு விமானம் மூலம் வந்து சேர்ந்தனர். அவர்களைத் தொடர்ந்து வரும் திங்கள்கிழமைக்குள் மேலும் 400 இந்தியர்கள் வர உள்ளனர்.
இவர்கள் மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு திரும்புகின்றனர். இந்த 600 பேரையும் சேர்த்தால், இதுவரை 1200 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான விமான செலவு உள்ளிட்ட செலவுகளை மத்திய அரசு ஏற்றுள்ளது. இவர்களைத் தவிர பாக்தாதில் உள்ள பல்வேறு நிறுவனங்களுடன் நமது தூதரக அதிகாரிகள் பேசி வருகின்றனர். அடுத்த வாரத்துக்குள் மேலும் 400 பேர் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.
தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர்
விழுப்புரத்தை சேர்ந்த சின்னதம்பி, சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த பழனி, மதுரை வேலூரை சேர்ந்த கிருஷ்ணன், திருவண்ணாமலை செங்கத்தை சேர்ந்த பகரிதம் ஆகிய 4 பேர் ஐதராபாத் வழியாக நேற்று மாலை 7 மணிக்கு தனியார் விமானம் மூலம் சென்னை வந்தனர்.
அவர்களை அரசு அதிகாரிகள், அழைத்து சென்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்க வைத்துள்ளனர். இன்று அவர்கள் 4 பேரையும் முதல்வர் ஜெயலலிதா சந்திக்க உள்ளார். அதன் பின்னர், அவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு அனுப்பப்பட உள்ளனர் என கூறப்படுகிறது.
ஐதாராபாத்தில் 80 பேர்: ஈராக்கில் பல்வேறு பகுதியில் பணியாற்றிய ஆந்திரா மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த 80 பேர், சிறப்பு விமானம் மூலம் ஐதராபாத்தில் பத்திரமாக வந்து சேர்ந்தனர். இதில் 74 பேர் கிர்குக் நகரில் உள்ள குளிர்பான தயாரிப்பு ஆலையில் ரூ.35,000 மாத சம்பளத்துக்காக வேலைக்கு சென்றுள்ளனர்.
ஆனால் கடந்த 2 மாதமாக சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட தெலங்கானாவின் கரீம்நகர் மாவட்டதைச் சேர்ந்த அஞ்சய்யா தெரிவித்தார்.பெங்களூரில் 37 பேர்: ஈராக்கில் பரிதவித்த கர்நாடகத்தைச் சேர்ந்த 37 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு, பெங்களுருக்கு சிறப்பு விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.